மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் :- ஆட்சியர் க.இளம்பகவத் வழங்கினார்
தூத்துக்குடி மாவட்ட குறைதீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு நலதிட்ட உதவிகளை ஆட்சியர் க.இளம்பகவத் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் வாராந்திர (திங்கள் கிழமை)மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கயத்தார் வட்டம் சிவஞானபுரம் கிராமத்தைச் சேர்ந்த படைவீரர் பாலமுருகன் என்பவர் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியை மேற்கொள்ளும் பொழுது கண்ணிவெடி வெடித்து வலது கண் பார்வைத்திறன் மொத்தமாக பாதிக்கப்பட்ட வகைக்கு கார்கில் நிவாரண நிதியிலிருந்து வரப்பெற்ற நிவாரண தொகை ரூ.5 இலட்சத்திற்கான காசோலையினையும், தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு விபத்துகளில் மரணமடைந்த நபர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 1 இலட்சம் வீதம் 3 நபர்களுக்கு ரூ.3 இலட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், பயனாளிகளிடம் வழங்கினார்.
பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வேண்டி, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 522 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்கள்.
முன்னதாக, மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 18 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு அவர்களின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்தார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இரவிச்சந்திரன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி.) ஹபிபூர் ரஹ்மான், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் விக்னேஷ்வரன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பென்னட் ஆசீர் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பிரம்மநாயகம், துணை ஆட்சியர் (பயிற்சி) சத்யா மற்றும் அனைத்துத் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.