தக்கலை, ஜன- 25-
குமரி நாடாளுமன்ற தொகுதியில் இந்திய கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்ட விஜய்வசந்த் பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் 2 வது முறையாக வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக நேற்று குமரி மேற்கு மாவட்டம் பத்மனாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது,
காலை 9:00 மணியளவில் மணலிக்கரை அருகே வாளைவிளை பகுதியில் இருந்து திறந்த வாகனத்தில் நன்றி அறிவிப்பு பிரச்சார பயணம் துவக்கியது. இந்த நன்றி அறிவிப்பின் போது பொதுமக்கள் இடம் குறைகளை கேட்டு அறிந்து மனுக்களை பெற்று கொண்டார்.
குமாரபுரம், முட்டைகாடு, மேக்காமண்டபம், மணலி பத்மனாபபுரம், குமாரகோவில், கல் குறிச்சி, கேரளபுரம், திக்கணோடு, வழியாக தாராவிளையில் மதியம் நிறைவு செய்து மாலை 3:30 மணிக்கு மேல் குளச்சல் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நன்றி அறிவிப்பு பயணம் செய்தார்.
நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால்சிங், வட்டார தலைவர்கள் வழக்கறிஞர் ஜெபா, பிரேம்குமார், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ரத்தினகுமார் மற்றும் பேரூராட்சி தலைவர்கள், நகர, பேரூர், கிராம காங்கிரஸ் நிர்வாகிகள் உட்பட இந்தியா கூட்டணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.