நாகர்கோவில் ஜூலை 5
கன்னியாகுமரி களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலை மற்றும் மார்த்தாண்டம் பார்வதிபுரம் மேம்பாலங்களை சீர் செய்ய சிறப்பு நிதியாக 21 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டுமென டில்லியில் மத்திய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்துதுறை அமைச்சர்
நிதின் கட்கரியை சந்தித்த கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கோரிக்கை மனு அளித்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது :-
கன்னியாகுமரி மாவட்டத்தில் 4 வழி சாலைக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அது மக்கள் பயன்பாட்டிற்கு வரும் வரையில் தற்பொழுதுள்ள தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்திற்கு பயன்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி மாவட்ட மக்கள் அன்றாட தேவைகளுக்கு இந்த சாலையை தினசரி பயன்படுத்தி வருகின்றனர். சிகிச்சைக்கு செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள், மாணவர்கள் என தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் சரக்கு போக்குவரத்திற்கும் இந்த சாலை மட்டுமே உதவி வருகிறது. சமீப காலமாக இந்த சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. பொது மக்கள் இந்த சாலையில் பயணிக்க மிகவும் சிரமப்படுகின்றனர். சமீபத்தில் பெய்த கடும் மழை காரணமாக சாலை முற்றிலும் பழுதடைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக விபத்துக்கள் மற்றும் உயிரிழப்பு அதிகரித்துள்ளது.
அது போன்று மார்த்தாண்டம், பார்வதிபுரம் மேம்பாலங்கள் பராமரிப்பின்றி காணப்படுகின்றது. சமீபத்தில் மார்த்தாண்டம் மேம்பாலத்தில் ஏற்பட்ட பள்ளம் இதற்கு அத்தாட்சி. ஆகவே இந்த இரண்டு பாலங்களும் பராமரிக்கப்பட வேண்டும்.
இந்த மேம்பாலங்கள் உள்பட களியக்காவிளை, படந்தாலுமூடு, குழித்துறை, மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ்பகுதி, மணலி, குமாரபுரம், இடலாக்குடி, சுசீந்திரம் ஆகிய பகுதிகள் மிகவும் பழுதடைந்துள்ளது. இந்த இடங்களில் சாலைகளை புதுப்பிக்கவும், செப்பனிடவும் 21 கோடி ரூபாய் செலவாகும் என்பதை தேசிய நெடுஞ்சாலை துறை தெரிவித்துள்ளது. ஆகவே பயணிகளின் நலனை கருத்தில் கொண்டும், விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்கவும் இந்த பணிகளுக்கு 21 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.