புதுக்கடை, பிப்- 26
குமரி மாவட்டம் விளவங்கோடு ,கல்குளம் தாலுகா பகுதிகளில் தொன்மையும் வரலாற்று சிறப்பும் வாய்ந்த 12 சிவ தலங்கள் அமைந்துள்ளது . ஆண்டுதோறும் சிவராத்திரி தினத்தை முன்னிட்டு 12 சிவாலயங்களையும் ஓடி தரிசிக்கும் சிவாலய ஓட்டம் என்ற நிகழ்ச்சி பாம்பரியமாக இங்கு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இது நாட்டில் வேறு எங்கும் இல்லாத சிறப்பு நிகழ்ச்சியாகும். சிவராத்திரிக்கு 7 நாட்களுக்கு முன்பு மாலை அணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள் சிவாலய ஓட்டத்தின் முந்தைய நாளில் ஏகாதசி தீயால் வேக வைக்கும் உணவுகளை உண்ணாமல் நோன்பு இருப்பது வழக்கம். இந்தசிவாலய ஓட்டத்தில் கலந்து கொள்ள கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பிற பகுதி பக்தர்களும், கேரள மாநிலத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கு பெறுவது வழக்கம்.
இதை தொடர்ந்து இந்த ஆண்டைய சிவாலய ஓட்டம் நேற்று முஞ்சிறை திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து துவங்கியது.
ராமாயணம் மகாபாரதம் காவியத்தோடு தொடர்புடைய திருமலை மகாதேவர் கோவிலிலிருந்து நேற்று காலை முதலே பக்தர்கள் ஓடத் துவங்கினார்கள். பிற்பகல் முதல் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கத் துவங்கியது. இதனால் முஞ்சிறை பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை புதுக்கடை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
சிவாலயம் ஓடும் பக்தர்கள் விசிறி, விபூதி பொட்டலத்துடன், முஞ்சிறையிலிருந்து துவங்கி திக்குறிச்சி மகாதேவர் கோவில், திற்ப்பரப்பு வீரபத்திரர் கோவில், திருநந்திக்கரை கோவில், பொன்மைனை மகாதேவர் கோவில், பன்னிப்பாகம் கோவில், கல்குளம் நீலகண்டசுவாமி கோவில், மேலாங்கோடு கோவில், திருவிடைக்கோடு சடையப்பர் கோவில், திருவிதாங்கோடு கோவில், திருப்பன்றிகோடு மகாதேவர் கோவில், திருநட்டாலம்சங்கரநாராயணர் கோவில் போன்றவற்றை ஓடியே சென்று பக்தர்கள் தரிசிக்கின்றனர். நட்டாலத்தில் இன்று 26 ம் தேதி இரவு முழுவதும் தூங்கா நோன்பு இருந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
சுமார் 110 கிலோ மீட்டர் சுற்றளவு அமைந்துள்ள இந்தப் பன்னிரு சிவாலயங்களையும் ஓடி தரிசித்த பக்தர்களுக்கு வழி நெடுகிலும் பொது மக்கள் சார்பில் சுக்கு நீர் ,கடலை, பானகம் ,மோர் ,கஞ்சி, பழம் போன்ற உணவு பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிரது.
இந்த 12 சிவாலயங்களையும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருசக்கர வாகனம் கார் டூரிஸ்ட் பஸ்கள் ஆட்டோ போன்ற வாகனங்களில் சென்று தரிசிப்பார்கள். இதனால் இன்று அதிகாலை முதல் முஞ்சிறை பகுதி வாகனங்களால் திணறியது. மொத்தத்தில் குமரி மாவட்ட 12 சிவாலயங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளது.
பாக்ஸ் – சிவாலய ஓட்டம் மற்றும் சிவராத்திரி விழா முன்னிட்டு குமரி மாவட்டத்துக்கு இன்று உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவ பக்தர்கள் அதிக அளவில் இன்று வாகனங்களில் வருவதால் மார்த்தாண்டம் – தேங்கா பட்டணம் சாலையில் நேற்று மாலை முதல் போக்கு வரத்து மாற்றி, காப்புக் காடு சந்திப்பில் இருந்து ஐரேனிபுரம், புதுக்கடை வழியாக பஸ்கள் இயக்கப்பட்டன.