கீழக்கரை,செப்.19-
கீழக்கரையில் 21 வார்டுகளில் உள்ள இருள் சூழ்ந்த இடங்களை தேர்வு செய்து பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி எம்.பி., நிதியிலிருந்து கீழக்கரை முழுவதும் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் 80 சோலார் மின் கம்பம் விளக்குகள் பொருத்தப்பட்டன. அதில் வடக்குத்தெரு 7-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் 3 சோலார் மின் கம்பம் பொருத்தப்பட்டன.அதில் வடக்குத்தெரு பள்ளிவாசல் அருகில் பொருத்தப்பட்ட சோலார் மின் கம்பம் விளக்கு திடீரென்று மாயமானது.இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.நேற்று இருந்த மின் கம்பம் இன்று இல்லை என்பதை அறிந்து பொதுமக்கள் கீழக்கரை நகராட்சி பொறியாளிடம் புகார் அளித்துள்ளனர்.இதுகுறித்து பொறியாளர் அருள் கூறியதாவது அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் கண்டறிந்து பறிமுதல் செய்து மீண்டும் அதே பகுதியில் சோலார் மின் கம்பத்தை பொருத்த படும் என்றார். மேலும் அப்பகுதி கவுன்சிலர் மீரான் அலி சமூக வலைதளம் ஒன்றில் சோலார் மின் கம்பம் பராமரிப்பு ஒப்பந்தம் முடிந்துள்ளதாகவும் அதனால் அதனை அகற்றி இருக்கலாம் என்றும் கூறியுள்ளார். இதனால் பொதுமக்கள் குழப்பத்தில் உள்ளனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து மீண்டும் அதே இடத்தில் மின் கம்பம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.