நாகர்கோவில் ஆக 4
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் சிறப்பு அன்னதானத்தை துவக்கி வைத்து தெரிவிக்கையில்-
மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் கோவில் திருக்கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இந்த கோயிலுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமல்லாமல், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் அதிக அளவில் பெண் பக்தர்கள் இருமுடி கட்டி வருவது வழக்கம். ஆடி வெள்ளிக்கிழமை முன்னிட்டு மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் சிறப்பு அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் கோயிலை சுற்றி வந்து அம்மனை தரிசனம் செய்த பின்னர், அன்னதானம் மண்டபத்தில் சிறப்பு அன்னதானம் துவக்கி வைக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து தீ விபத்தில் பாதிக்கப்பட்ட அருள்மிகு பகவதி அம்மன் கோவில் திருக்கோவில் மேற்கூரை சீரமைக்கும் பணியை ஆய்வு செய்யப்பட்டது. தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மேற்கூரை சீரமைக்கும் பணி ரூ.1.15 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. மேலும் மேற்கூரை பணிக்கு அமைக்கப்பட்டுள்ள மரத்தின் தன்மையை ஆய்வு செய்து, பணிகள் தொன்மை மாறாமல் அமைக்க வேண்டும் என துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.