குளச்சல், பிப்- 27
குமரி மாவட்டம் குளச்சல் அருகே மணக்குடி பகுதியை சேர்ந்த ஆன்டனி என்பவரின் ராபின் என்ற விசைப்படகில் 19 பேர் முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் நேற்று குமரியில் இருந்து 70 நாட்டிகல் மைல் தொலைவில் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது படகில் விரிசல் விழுந்துள்ளது. இதனால் தண்ணீர் புகுந்து படகு கடலில் மூழ்க துவங்கியது.
உடனடியாக படகில்இருந்த மீனவர்கள் பக்கத்தில் மீன்பிடிக்கும் நபர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர்கள் உதவியுடன் 19 பேரும் கடலுக்குள் குதித்து உயிர் தப்பினர். மற்ற படகுகளில் இருந்தவர்கள் அவர்களை மீட்டனர். படகு மூழ்கும் காட்சியை மற்ற படகில் இருந்தவர்கள் வீடியோ எடுத்தனர். இன்று இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.