அரியலூர்,டிச;14
அரியலூர் மாவட்டம், பெரியதிருக்கோணம் கிராமத்தில் உள்ள மருதையாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய ஏழு பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா, கதிராமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் (50) தனது குடும்பத்தினருடன், அரியலூர் மாவட்டம் பெரிய திருக்கோணம் கிராமத்தில் தங்கியுள்ளார். இவர் பெரிய திருக்கோணம் கிராமத்தின் அருகே ஓடும் மருதையாற்றின் கரையோரங்கள் மற்றும் ஆற்றின் நடுவே உள்ள கருவேல மரங்களை வெட்டி, காயவைத்து, அதனை கரியாக்கி வியாபாரம் செய்து வருகிறார். இப்பணிகளுக்காக செல்வராஜ், தனது குடும்பத்தினர் மஞ்சுளா (41), கோபால்(28), ஐஸ்வர்யா (24), ஆகாஷ்(2), சுகன் (10), மற்றும் எட்டு மாத கைக்குழந்தை ஆகியோருடன் மருதையாற்றின் கரையோரம் குடிசை அமைத்து மரக்கரியை உருவாக்கம் பணிகளை செய்து வந்தார்.
இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக பெய்த கன மழையின் காரணமாகவும், பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாகவும், பச்சை மலையில் இருந்து உற்பத்தியாகி வரும் மருதையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த வெள்ளத்தின் நடுவே செல்வராஜ் குடும்பத்தினர் சிக்கிக் கொண்டனர். இவர்கள் மருதையாற்று வெள்ளத்திற்குள் சிக்கித் தவிப்பது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில், வருவாய்த்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்றனர். தீயணைப்புத் துறையினர் வெள்ளத்தைக் கடந்து சென்று, செல்வராஜ் குடும்பத்தினரை மீட்டு, பாதுகாப்பாக அழைத்து கரைக்கு கொண்டு வந்தனர். குழந்தைகளை முதலில் அலுமினிய கொப்பரையில் அமர வைத்து பாதுகாப்பாக அழைத்து வந்தனர். பின்னர் பெரியவர்கள் கயிறு கட்டி பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வந்தனர். மேலும், மீட்கப்பட்ட ஏழு பேருக்கும் உடனடியாக உணவு வழங்கப்பட்டு, மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினர், வருவாய் துறையினர் மற்றும் கிராம பொதுமக்கள், இளைஞர்கள், ஊராட்சி மன்றத்தலைவர் ஆகியோர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி பாராட்டுகளைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி, அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் மணிகண்டன், அரியலூர் வட்டாட்சியர் முத்துலெட்சுமி, முதல்நிலை மீட்பாளர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், இதர அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்