கன்னியாகுமரி நவ 2
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட மயிலாடி ரிங்கல் தௌபே மேல்நிலைப்பள்ளியில் பணி நீட்டிப்பு பெற்று ரீட்டா மேரி என்பவர் தலைமையாசிரியராக பணியாற்றி 31.05.2020ல் ஓய்வு பெற்றார். இவருக்கு வழங்க வேண்டிய பணபலன்களை 2019ல் A.G. அலுவலகம் அனுமதித்தும், அப்போதைய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், நாகர்கோவில் மாவட்ட கல்வி அலுவலர், தாளாளர் மூவரும் இணைந்து தவறான குற்றச்சாட்டுகளை சுமத்தி அரசு அனுமதித்த பணபலன்களை பெற்று வழங்காமல் வேண்டுமென்றே காலம் கடத்தி வந்தனர்.
இதை எதிர்த்து ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ரீட்டா மேரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து 13.06.2022-ல் நீதிமன்ற ஆணையின் அடிப்படையில் ஓய்வூதிய நிலுவை தொகையினை மூன்று ஆண்டுகள் கழித்து பெற்றார்.
இதன் பிறகும் பழிவாங்கும் போக்கில் அவ்வாசிரியருக்கான பிறபணபலன்களை வழங்காமல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், நாகர்கோவில் கல்வி அலுவலர் மற்றும் பள்ளி தாளாளர் பழிவாங்கும் நோக்கில் காலம் கடத்தி வந்தனர். இதை எதிர்த்து அவ்வாசிரியர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கின் தீர்ப்பில் நாகர்கோவில் கல்வி மாவட்ட அலுவலர் 5% வட்டியுடன் இரண்டு மாதங்களுக்குள் பணபலன்களை வழங்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆணை வழங்கியுள்ளது.