புதுக்கடை, மார்- 4
புதுக்கடை அருகே விழுந்தயம்பலம் பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின் ராஜ் (35). இவர் ஐரேனிபுரம் பகுதியில் பைனான்ஸ் நடத்தி வருகிறார். கடந்த சில தினங்கள் முன்பு இவருக்கு ஒரு செல்போன் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் நீதி வலை பத்திரிகையின் நிருபர் என கூறி சம்மந்தபட்ட பைனான்சில் அதிக வட்டி வாங்குவதாகவும், அடகு வைக்கும் நகைகளை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்வதாகவும் மிரட்டியுள்ளனர். அதன் பிறகு 2 நபர்கள் அவரது கடையிலும் சென்று நிறுவனம் செய்தி வெளியிடுவதாக மிரட்டி 1 லட்சம் கேட்டனர். இல்லை என்று கூறியதால் 5 ஆயிரம் ரூபாயை வாங்கி விட்டு சென்றுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் ஜஸ்டின் ராஜை அழைத்து 1 லட்ச ரூபாயுடன் புதுக்கடை அருகே கூட்டாலுமூடு பகுதியில் வர கூறியுள்ளனர். இது குறித்து ஜஸ்டின் ராஜ் புதுக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
உடனடி புதுக்கடை சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் ஆலோசனையின் படி ஜஸ்டின் ராஜ் கூட்டாலுமூடு சென்றார். அங்கு ஒரு காரில் போலி நிருபர்கள் இருந்துள்ளனர். ஜஸ்டிராஜ் சென்றனும், பணத்தை கேட்டுள்ளனர். உடனே பின்னால் சென்ற போலீசார் காரில் இருந்த 8 நபர்களை சுற்றி வளைத்து பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்றனர்.
தொடர்ந்து போலீஸ் விசாரணையில் சம்மந்த பட்ட 8 நபர்களும் நீதி வலை என்ற பத்திரிகையில் பணி புரிவதாக அடையாள அட்டை வைத்திருந்தனர். தொடர் விசாரணையில் பிடிபட்டவர்கள் கல்லு விளை, லீபுரத்தை சேர்ந்த ஆன்டனி (51), கொல்லங்கோடு சுனில் (33), எஸ் டி மங்காடு லால் (36), நாகர்கோவில் ,கோட்டாறை சேர்ந்த செல்வராஜ் (37), கன்னியாகுமரியை சேர்ந்த சுரேஷ் பேபி (52), திருவரம்பு பகுதி வெல்பின் ஜோஸ்(41), கீழப்பெரு விளையை சேர்ந்த மணிகண்டன் (38), சின்ன முட்டத்தை சேர்ந்த சகாய ஜாண் போஸ்கோ (58) என தெரிய வந்தது. இவர்கள் அனைவரும் ஒரே நிறுவன பெயரில் அடையாள அட்டை வைத்திருந்தனர்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் இந்த கும்பல் குமரி மாவட்டத்தில் உள்ள பிரபல தொழிலதிபர்கள், நிறுவனங்களை மிரட்டி பணம் பறித்தது தெரிய வந்தது. இதையடுத்து புதுக்கடை போலீசார் 8 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
குமரி மாவட்டத்தில் சமீப காலமாக இது போன்ற போலி நிருபர்கள் கும்பலாக பல்வேறு விதி மீறல்களில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. அரசு அலுவலகங்களில் கூட பத்திரிகையாளர் என்ற அடையாள அட்டைகளை காட்டி மிரட்டுவதாக புகார் உள்ளது.இது தொடர்பாக சம்மந்தபட்ட துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.