நாகர்கோவில் ஜன 6
கன்னியாகுமரி மாவட்டம் கூட்டுறவுத்துறை சார்பில் லட்சுமிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் இறக்கி வைக்கப்பட்ட பொங்கல் கரும்புகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, நேற்று (05.01.2025) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, தெரிவிக்கையில்:-
தமிழ்நாடு முதலமைச்சர் 2025 ம் ஆண்டு பொங்கல் திருநாளை தமிழ்நாடு மக்கள் சிறப்பாக கொண்டாட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி, 1கிலோ சர்க்கரை, மற்றும் முழுக்கரும்பு சேர்த்து வழங்கப்படும் என ஆணை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க கன்னியாகுமரி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 121 கூட்டுறவு நிறுவனங்களின் கீழ் செயல்படும் 581 நியாய விலைக்கடைகள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கீழ் செயல்படும் 135 நியாய விலைக்கடைகள், இதர கூட்டுறவின் கீழ் செயல்படும் 46 நியாய விலைக்கடைகள், சுயஉதவிக்குழுவால் நடத்தப்படும் 3 நியாய விலைக்கடைகள் என மொத்தம் 765 நியாய விலைக்கடைகளில் இணைக்கப்பட்டுள்ள 5,77849 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
பொங்கல் பரிசுத்தொகுப்பில் வழங்கப்பட உள்ள கரும்பு அண்டை மாவட்டமான மதுரையில் கரும்பு விளைவிக்கப்படும் இடங்களுக்கு சென்று விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு மாவட்டத்தில் 7 இடங்களில் இறக்கி வைக்கப்பட்டு அங்கிருந்து சம்மந்தப்பட்ட நியாய விலைக்கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதில் ஒரு இடமான லட்சுமிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்திலிருந்து கூட்டுறவுத்துறையால் நடத்தப்படும் 77 நியாய விலைக்கடைகள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் நடத்தப்படும் 19 நியாய விலைக்கடைகள், மீன் வளத்துறையால் நடத்தப்படும் 12 நியாய விலைக்கடைகள் ஆகிய 108 நியாய விலைக்கடைகளுக்கு அனுப்பப்படும் கரும்பின் தரம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நடைபெற்ற ஆய்வுகளில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சிவகாமி, கூட்டுறவு சார்பதிவாளர்கள், துறை அலுவலர்கள், உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.