இரணியல், மார்- 1
இரணியல் அருகே உள்ள பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்லப்பன் மகன் பச்சைமால் ( 29). கொத்தனார் வேலை செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. உடல்நிலை சரியில்லாததால் கடந்த ஒரு வாரமாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று அந்த பகுதியில் உள்ள கால்வாயில் குளிக்க சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பவில்லை. பின்னர் அவரது அண்ணன் ராமகிருஷ்ணன் சென்று பார்த்த போது பச்சைமால் தண்ணீரில் பேச்சு மூச்சு இன்றி கிடந்துள்ளார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை கொண்டு சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே பச்சைமால் இறந்து விட்டதாக கூறியுள்ளார்.
இது குறித்து ராமகிருஷ்ணன் இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் உடலை குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பச்சையம்மால் குளிக்கும் போது தண்ணீர் மூழ்கி இறந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். எனினும் அவர் எப்படி இறந்தார் என்பது பிரேத பரிசோதனைக்கு பிறகு உண்மை நிலை தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.