அருமனை, மார்- 29
அருமனை அருகே பிலாக்கோடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் மகள் ராஷிகா (18). இவர் தலக்குளம் பகுதியில் உள்ள ஒரு நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு அங்கு விடுதியில் வந்து தங்கி படித்து வந்தார். இந்த நிலையில் ராஷிகாவுக்கு கடந்த ஒரு சில வாரத்துக்கு முன்னதாக தலை வலி, ஏற்பட்டு வாந்தி இருந்ததாக தெரிகிறது. இதை ராஷிகா தனது வீட்டுக்கு வந்து பெற்றோரிடம் நிலைமையை கூறியுள்ளார். இதையடுத்து அவரை பெற்றோர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்து சென்று, அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவருக்கு நோய்கள் எதுவும் இல்லை எனக் கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு சாப்பாடு முடித்து ராஷிகா உறங்க சென்றுள்ளார். நேற்று காலையில் ராஷிகா எந்த அசைவும் இல்லாமல் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக அவரை பெற்றோர்கள் மீட்டு குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து அருமனை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவியின் திடீர் இறப்பு அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது