மதுரை செப்டம்பர் 13,
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழாவில் மீனாட்சி சுந்தரேசுவரர் பட்டாபிஷேகம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். சித்திரை திருவிழாவில் மீனாட்சிக்கும், ஆவணி திருவிழாவில் சுந்தரேசுவரருக்கும் பட்டாபிஷேகம் நடைபெற்றது. உலகப்பிரசிதிபெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா கடந்த 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில் விழாவில் கடந்த 6 நாட்களாக சிவபெருமான் நிகழ்த்திய மாணிக்கம் விற்றது, நாரைக்கு மோட்சம் அளித்தது, பொற்கிழி அளித்தது, பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை ஆகிய சிவபெருமானின் திருவிளையாடல்கள் ஆடி வீதியில் தினமும் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் 7ஆம் நாளான காலை
சிவபெருமான் வளையல் விற்ற லீலை அலங்காரத்தில் எழுந்தருளி சுந்தரேசுவரர் காட்சி அளித்தார். இதையடுத்து ஆவணி மூலத்திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான சுந்தரேசுவரர் பட்டாபிஷேகம், கும்ப லக்கனத்தில் கோவிலில் உள்ள சுவாமி சன்னதி ஆறுகால் பீடத்தில் நடைபெற்றது. அதில் சுவாமியிடமிருந்து செங்கோலை பெற்று அவரது பிரதிநிதியாக கோவில் தக்கார் ருக்மணி பழனிவேல்ராஜன் சகல விருதுகளுடன் சுவாமி சன்னதி 2-ஆம் பிரகாரம் வலம்வந்தார். பின்னர் அந்த செங்கோலை சுவாமியின் திருக்கரத்தில் சமர்ப்பித்தார். இதை தொடர்ந்து நேற்று (செப்.,12) முதல் சுந்தரேசுவரர் ஆட்சி 8 மாதங்களுக்கு நடைபெறும் என்பது ஐதீகம். நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்