ஒட்டக்கோவில் கிராமத்தில் தி ராம்கோ சிமெண்ட் நிறுவனத்தின் சுண்ணாம்புக்கல் குவாரி விஸ்தீரணத்திற்கான பொதுமக்கள் கருத்துக்கேட்புக்கூட்டம்.
அரியலூர்,நவ;20
அரியலூர் மாவட்டம், ஒட்டக்கோவில் கிராமத்தில் அமைந்துள்ள தி/ள். தி ராம்கோ சிமெண்டஸ் லிமிடெட் நிறுவனத்தின் சுண்ணாம்பு கன்கவர் குவாரி விஸ்தீரணத்திற்கான பொதுமக்கள் கருத்துக்கேட்புக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், ஒட்டக்கோவில் கிராமத்தில் அமைந்துள்ள தி/ள். தி ராம்கோ சிமெண்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் உத்தேசிக்கப்பட்டுள்ள சுண்ணாம்பு கன்கர் குவாரி விஸ்தீரணம் 57.36.0 ஹெக்டேர், புல எண். 204/10, 204/11, 204/12, 204/13, 204/14, 204/15 மற்றும் பிற ஒட்டக்கோவில் கிராமம், அரியலூர் வட்டம், அரியலூர் மாவட்டத்தில் அமைய உள்ளது. இதற்கான பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் அரியலூர் வட்டம், ஒட்டக்கோவில் கிராமம், இந்திய உணவு கழகம் குடோண் அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் நேற்று செவ்வாய் கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில், இத்திட்டம் செயல்படுத்தும் முறைகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆணையம் 4D, பனகல் மாளிகை, சைதாப்பேட்டை சென்னை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
மேலும் இக்கருத்துக்கேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் மாசுக்கட்டுபாடுகள் குறித்தும் மற்றும் கிராம இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் தங்களின் கோரிக்கைகள் குறித்தும் கருத்துக்களை பதிவு செய்தார்கள். பின்னர், இக்கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை அளித்தனர். அனைத்து கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்பட்டு, பொதுமக்களின் நலன் கருதி திட்டங்கள் செயல்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கி.முரளி, அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் மணிகண்டன், வட்டாட்சியர் முத்துலெட்சுமி, அரசு அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்