ஈரோடு மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் வாழ்ந்து காட்டுவோம் திட்டமானது பவானி, பவானிசாகர், சென்னிமலை, சத்தியமங்கலம், தாளவாடி ஆகிய ஐந்து வட்டாரங்களில் 77 ஊராட்சிகளில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் சுய உதவிக்குழு பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தை சார்ந்த உறுப்பினர்கள் முதன்மை பயனாளிகளாக பயன் பெற தகுதி உடையவர்கள். பெண்கள் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாற்றுத்திறனாளிகள், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ள தொழில் முனைவோருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் இத்திட்டத்தின் மூலம் மகளிர் விவசாய உற்பத்தியாளர்களை கொண்டு 86 உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்பட்டு ரூ.75,000 வீதம் குழுக்களுக்கு வழங்கப்பட்டு விவசாய உற்பத்தி திறனை அதிகரித்து வருகின்றனர். இதில் ஆர்வமுள்ள உற்பத்தியாளர் பெண்களை கொண்டு 2 உற்பத்தியாளர் நிறுவனங்கள் அமைக்கப்பட்டு ரூ.30.00 லட்சம் வீதம் ரூ.60.00 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இணை மானிய திட்டத்தின் மூலம் ஈரோடு மாவட்டத்தில் 174 நபர்களுக்கு புதிதாக தொழில் அமைப்பதற்கும் மற்றும் தொழில் மேம்படுத்துவதற்கும் 30 சதவீதம் ரூ.2.06 கோடி மானியத்துடன் ரூ.5.90 கோடி மதிப்பிலான கடன் உதவிகள் வழங்கி தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக பழங்குடியினர் மக்களுக்கு தொழில் குழுக்கள் உருவாக்கப்பட்டு அவர்கள் பயனடைந்து வருகின்றனர். இதன் அடிப்படையில் தாளவாடி வட்டாரத்தில் ஆசனூர் ஊராட்சி ஒன்றியத்தில் கோட்டாடை மலை குக்கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வழிகாட்டுதலின்படி, வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் ரூ.7.25
லட்சத்தில் சூரிய மின் ஆற்றல் மூலம் நேரடியாக இயங்கும் சிறு தானிய மதிப்பு கூட்டும் மையம் கொள்கலன் வடிவில் சிறு தானிய கல், மண் பிரிக்கும் இயந்திரம், பாலீஸ் செய்யும் இயந்திரம் மற்றும் சிறு தானிய மாவாக்கக்கூடிய இயந்திரம் நேரடியாக சூரிய மின் ஆற்றலில் இயங்கக்கூடிய வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து இயந்திரங்களும் நாளொன்றுக்கு 200 கிலோ வீதம் அரைக்கக்கூடிய அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆசனூர் ஊராட்சி பழங்குடியினர் சூரிய மின் ஆற்றல் சிறு தானிய தொழில் குழு மூலம் பயனடைந்து வருகின்றனர். மேலும் இங்கு விளைவிக்கும் அனைத்து சிறு தானியங்களும் மக்களுக்கு சிரமம் இல்லாமல் பயன்பெறும் வகையில் மதிப்புக்கூட்டி கிடைக்கும் வகையில் அமைந்துள்ளது.
திட்டத்தில் பயன் அடைந்து வரும் ஆசனூர் ஊராட்சி ஜோக்கி தொட்டி பகுதியை சேர்ந்த வசந்தா மற்றும் லதாமணி உட்பட பலர் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.