தேனி மாவட்டம் வருஷநாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் குறிப்பாக பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அவர்களுக்கு தற்காப்பு கலையான கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் இந்த கராத்தே பயிற்சியில் வருசநாடு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 150க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் பயிற்சி பெற்று வருகின்றனர். கராத்தே பயிற்சியின் முதல் இரண்டு சுற்றுகளை முடித்த பெண்களுக்கு அடுத்த படி நிலைக்கான பயிற்சியின் தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த கருப்பு பெல்ட் பட்டம் பெற்ற கராத்தே பயிற்சியாளர்கள், நேரில் வந்து பெண் குழந்தைகளுக்கு பயிற்சி அளித்தனர். அவர்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்டும் வகையில் கராத்தே பயிற்சியாளர்கள் தங்களின் கை, கால், தலை மற்றும் உடலில் ஓடுகளை உடைத்து காட்டினர். மலை கிராமங்களை சேர்ந்த பெண் குழந்தைகள் இந்திய அளவிலும் உலக அளவில் நடைபெறும் தற்காப்பு கலைகளில் பங்கேற்கும் வகையில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சியில் பங்கேற்ற பெண் குழந்தைகளுக்கு அடுத்த படிநிலைக்கான பெல்ட்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.