கன்னியாகுமரி ஏப் 21
கன்னியாகுமரி கடற்கரையில் ஈஸ்டர் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு குவிந்த சுற்றுலா பயணிகள். உலக சுற்றுலாத்தலமாக விளங்கிவரும் கன்னியாகுமரிக்கு வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.இவர்கள் சூரிய உதயம், சூரிய அஸ்தமனம், கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை கண்டு ரசித்து உற்சாகத்துடன் செல்கின்றனர். கடந்த வாரம் வெள்ளிக்கிழமை முதல் தொடர்ந்து மூன்று நாள் விடுமுறை என்பதால் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகளின் வருகை சற்று அதிகரித்து காணப்பட்டது.
கன்னியாகுமரி கடல் நடுவு அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறை பகுதியில் அடிக்கடி கடும் கடல் சீற்றம், கடல் நீர்மட்டம் தாழ்வு போன்றவை நிகழ்வதால் பெரும்பாலான நாட்களில் சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபத்திற்கு மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறைக்கு செல்ல முடியாமல் பயணிகள் ஏமாற்றம் அடைந்து வந்தனர்.திருவள்ளுவர் சிலைக்கு தினமும் சென்று வரும் வகையில் விவேகானந்தர் பாறையில் இருந்து திருவள்ளுவர் பாறைக்கு இணைப்புப் பாலம் அமைக்க வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதைத்தொடர்ந்து, தமிழக அரசின் சார்பில் ரூ.37 கோடி செலவில் 77 மீட்டர் நீளத்திற்கு திருவள்ளுவர் சிலை – விவேகானந்தர் பாறை இடையே கண்ணாடி கூண்டு நடைபாலம் அமைக்கப்பட்டது. கடந்த ஐந்து தினங்களுக்கு முன் பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டிருந்த கண்ணாடி இழைப் பாலம் மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து விடப்பட்டது. எனவே சுற்றுலா பயணிகள் கூட்டம் இங்கு அதிகமாக காணப்பட்டது.