சிவகங்கை:செப்:03
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மக்கள் இலவச வீட்டுமனைப் பட்டா சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 455 மனுக்கள் பெறப்பட்டது. அம்மனுக்களில் தகுதியுடைய மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
மேலும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 11 மாற்றுத்திறனாளிகளின் பாதுகாவலருக்கான சான்றுகளையும் 01 மாற்றுத்திறனாளிக்கு ஊன்றுகோலினையும் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.எஸ்.செல்வசுரபி உட்பட அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.