நாகர்கோவில் ஜூன் 19
தூத்தூர் மண்டல விசைப்படகுகளுக்கான வருடாந்திர ஆய்வை தேங்காய்பட்டணம் மற்றும் கொச்சிதுறைமுகங்களில் நடத்த வேண்டுமென சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளது.
7.6.2024 தேதியிட்ட தமிழக மீன்வளத்துறை சார்பில் மேலக்குறும்பனை முதல் நீரோடி வரையிலான பங்குத்தந்தையர்கள், மீனவர் கூட்டுறவு சங்கங்களின் செயலாட்சியர்கள் மற்றும் விசைப்படகு சங்கங்களுக்கு அனுப்பட்டுள்ள கடிதத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு கடற்கரைக்குட்பட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர், குளச்சல் (இருப்பு) தேங்காய்பட்டணம் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத விசைப்படகுகள் தேங்காய்பட்டணம் மீன்பிடித்துறைமுகத்தில் வைத்து மட்டுமே 19.6.2024 நேரடியாக வருடாந்திர ஆய்வு செய்யப்படு மெனவும் கேரளாவில் ஆய்வு நடத்தப்படாது எனவும் கூறப்பட்டிருந்தது.
இது மீனவர்களுக்கு பெருத்த அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது சம்பந்தமாக தமிழக மீன்வளத்துறை அமைச்சரை சந்தித்து சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவரும் சின்னத்துறை மீனவர் சங்கங்களின் ஆலோசகருமான ஜஸ்டின் ஆன்டணி அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தூத்தூர் மண்டலத்தில் சுமார் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. தேங்காய்பட்டணம் துறைமுகத்தில் சீரமைப்புப்பணிகள் நடைபெறுவதால் எல்லா விசைப்படகுகளுக்கும் ஆய்வு நடத்த இயலாத நிலை உள்ளது. எனவே விசைப்படகுகளுக்கான வருடாந்திர ஆய்வை
கொச்சியிலும் நடத்த வேண்டுமென தனது கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.
ஜஸ்டின் ஆன்டணி மேலும் கூறுகையில், மீன்பிடித் தடைக்காலமானதால், குமரி மாவட்டம் மேற்கு கடற்கரைக்குட்பட்ட மீன்வளம் மீனவர் நலத்துறை குளச்சல் (இருப்பு) தேங்காய்பட்டணம் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத பல விசைப்படகுகள், அதிலும் குறிப்பாக தூத்தூர் மண்டல மீனவர்களின் விசைப்படகுகள் கொச்சியில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தேங்காய்பட்டணம் துறைமுகத்தில் மட்டுமே வருடாந்திர ஆய்வு செய்யப்படுமாயின் இது இம்மீனவர்களுக்கு வீண்செலவை ஏற்படுத்தும். மட்டுமல்லாது, கடற்சீற்றம் காரணமாக படகுகளுக்கும் சேதம் விளைய வாய்ப்புள்ளது. எனவே, மீனவர்களின் நலன் கருதி தமிழக அரசு விசைப்படகுகளுக்கான வருடாந்திர ஆய்வை கொச்சியிலும் நடத்த வேண்டும் என்றார்.
மனுவை பெற்றுக்கொண்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா இராதாகிருஷ்ணன் இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.