தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு மருத்துவமனையில் ரூ.6.00 இலட்சம் மதிப்பீட்டில் கனரக சலவை இயந்திரம் மற்றும் சலவை அறையினை மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி திறந்து வைத்தார்.
பாலக்கோடு அரசு மருத்துவமனையில் நாள்தோறும் புற நோயாளிகள் பிரிவில் சுமார் 700 முதல் 800 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர் .உள் நோயாளிகளாக சுமார் 80 முதல் 90 நோயாளிகள் நாள் தோறும் மருந்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருன்றனர். நோயாளிகளுக்கான படுக்கை விரிப்புக்கள், தலையனை உறைகள் மற்றும் அறுவை சிகிச்சையின் போது நோயாளிகளுக்கு அளிக்கப்படும் துணிகள், மருத்துவமனை திரைசீலைகள் மற்றும் துண்டுகள் போன்றவை இதுநாள் வரை மருத்துவமனை பணியாளர்களைக் கொண்டு கைகளால் மட்டுமே துவைத்து சலவை செய்து பயன்படுத்தப்பட்டு வந்தது.
மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ. 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், பாலக்கோடு அரசு மருத்துவமனை முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட நிதியிலிருந்து (CMCHIS ) ரூ. 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என மொத்தம் ரூ. 6 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய கனரக சலவை இயந்திரம் மற்றும் துணியை பிழிந்து உலர வைக்கும் எந்திரம் வாங்கப்பட்டது. அதனை தொடர்ந்து கனரக சலவை இயந்திரம் மற்றும் சலவை அறையினை மருத்துவமனை பயன்பாட்டிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி தொடங்கி வைத்தார்.
பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு கனரக சலவை இயந்திரம் வழங்கிய மாவட்ட ஆட்சியருக்கு பொது மக்கள், நோயாளிகள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் நன்றி தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் சாந்தி, தலைமை மருந்துவர் பாலசுப்ரமணியம், மருத்துவர்கள் செந்தில்குமார், சசிரேகா, ஷாலினி, மருந்தாளுநர்கள் முத்துசாமி, முருகேசன், செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.