நாகர்கோவில் டிச10
விவசாய விளை பொருட்கள் மற்றும் அத்தியாவசியமான உணவு வகைகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்க வேண்டும் என்று கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றினை கொண்டு வந்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது :-
பாமர மக்கள் அன்றாடம் உபயோகிக்கும் ஆட்டா, மைதா, ரவை, கடலை மாவு போன்ற
உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளித்து ஏழைகளுக்கு அரசு உதவ வேண்டும். அதுபோன்று விவசாயத்திற்கு பயன்படும் இயந்திரங்களுக்கும் ஜிஎஸ்டி விலக்கு அளிக்க வேண்டும். இது நலிந்து வரும் விவசாயிகளை காப்பாற்ற பெரிதும் உதவும். அத்தியாவசிய உணவு பொருட்கள் மீதான ஜிஎஸ்டி ஏழை மக்களையும், விவசாய பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி விவசாயிகளையும் மிகவும் பாதிக்கின்றன. மேலும் மத்திய அரசு விவசாயிகளுக்கும் விவசாயத்திற்கும் உதவும் வண்ணமாக கூடுதல் நிதி வழங்க வேண்டும். கிசான் சம்மான் நிதி திட்டம், நீர் பாசன திட்டங்கள் மற்றும் விவசாய ஆராய்ச்சிக்கு அதிகமான நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.