நாகர்கோவில் மே 27
கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய கனமழை பெய்துள்ளது.மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை பெய்திருக்கிறது. மாம்பழத்தாறு பகுதியில் 85 மில்லி மீட்டர் மழையும், ஆணைகிடங்கில் 84 மில்லி மீட்டர் மழையும், பாலமோரில் 82 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மைலாடியில் 103.02 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக குமரி மாவட்டத்தில் கன மழை பெய்து வருகிறது. இதனால் பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளுக்கு வினாடிக்கு 4258 கனஅடி தண்ணீர் வந்துகொண்டு இருப்பதால் அணையிலிருந்து வினாடிக்கு 2178 கன அடி தண்ணீர் வெளியேற்றபட்டு வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோர பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றங்கரை ஓரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தி இருக்கிறது.