தக்கலை, பிப்- 16
தக்கலை அருகே உள்ள கீழக்கல்குறிச்சியை சேர்ந்தவர் குபேரன் (45). இவர் சொந்தமாக வேன் வைத்து ஓட்டி வருகிறார். மது குடிக்கும் பழக்கம் கொண்ட குபேரன் கடந்த 12ஆம் தேதி மாலை மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். தக்கலை பழைய பஸ் நிலையம் அருகில் அவர் சென்றபோது அங்கு போலீசார் வாகன சோதனை நடத்தி, குபேரன் மது அருந்தியதால் அவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
இதனால் குபேரன் மன வேதனை அடைந்தார். அன்று இரவு 7 மணிக்கு அவர் தோட்டத்தில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். உறவினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தக்கலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி இன்று 15ஆம் தேதி காலை குபேரன் பரிதாபமாக உயிர் இழந்தார்.
இது குறித்து மனைவி பிரேமலதா அளித்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.