தேனி,மார்.3-
விவசாயிகள் அரசின் பல்வேறு திட்டப் பலன்களை பெறுவதற்கு வேளாண் அடுக்கு திட்டத்தில் (Agristack) தங்கள் விவரங்களை உடனடியாக பதிவு செய்து கொள்ள வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், தகவல்.
விவசாயிகள் அரசின் பல்வேறு திட்டப் பலன்களைப் பெறுவதற்கு தங்களது நில உடைமை விவரங்கள், பயிர் சாகுபடி அறிக்கை போன்ற தொடர்புடைய ஆவணங்களை ஒவ்வொரு முறையும் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. இதில் ஏற்படும் காலதாமதத்தினை தவிர்க்கும் வகையிலும் அரசின் திட்டங்களில் விவசாயிகள் குறித்த நேரத்தில் பயன்பெற ஏதுவாகவும், அனைத்து விவரங்களையும் மின்னணு முறையில் சேகரித்திட தமிழ்நாட்டில் வேளாண் அடுக்குத்திட்டம் (AgriStack) செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
தற்போது, விவசாயிகளின் பதிவுவிவரங்களுடன், ஆதார்எண், கைபேசிஎண், நிலஉடைமை விவரங்களையும் விடுபாடின்றி இணைக்கும் பணி சம்பந்தப்பட்ட வருவாய் கிராமத்தில் நடைபெற்று வருகிறது. மேலும் விவசாயிகள் பொது சேவை மையத்திற்கு (CSCs) சென்று நிலஉடைமை விவரங்கள் இணைக்க வேண்டும். பின்னர் அனைத்து விவரங்களும் ஒருங்கிணைக்கப்பட்ட ஆதார் எண் போன்ற தனித்துவமான தேசிய அளவிலான அடையாள எண் (Unique ID) ஒவ்வொரு விவசாயிக்கும் ஏற்படுத்தப்படும்.
2025-26 ஆம் நிதி ஆண்டு முதல், பிரதம மந்திரி கவுரவ நிதித் திட்டம் (PMKISAN), பயிர்க்காப்பீடுத் திட்டம் (PMFBY) போன்ற ஒன்றிய மற்றும் மாநில அரசின் திட்டங்களில் விவசாயிகள் எளிதில் பயன்பெற தேசிய அளவிலான தனித்துவ அடையாள எண் (Unique ID) மிகவும் அவசியம். இதுதொடர்பாக ஏற்கனவே கிராம அளவில் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது.
எனவே, விடுபட்ட விவசாயிகள் தங்களது கிராமங்களில் வேளாண்மை– உழவர்நலத்துறை அலுவலர்களால் நடத்தப்படும் சிறப்பு முகாம்கள் மற்றும் அருகில் உள்ள பொது சேவை மையங்களுக்கு நேரடியாகச் சென்று தங்கள் நில உடைமை விவரங்கள், ஆதார், கைப்பேசி எண் ஆகிய விவரங்களை அளித்து எவ்வித கட்டணமுமின்றி 31.03.2025-ஆம் தேதிக்குள் இத்திட்டத்தில் பதிவு செய்து பயன் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் .ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.