ஈரோடு மார்ச் 4
பிளஸ் 2 தேர்வு இன்று தொடங்கியது.
வருகிற 25 ந் தேதி வரை இந்த தேர்வு நடைபெறுகிறது. ஈரோடு மாவட்டத்தில் இத்தேர்வினை 223 பள்ளிகளைச் சேர்ந்த 22,540 மாணவ, மாணவியர்களும், தனித்தேர்வர்கள் 234 மாணவ, மாணவியர்களும் எழுதுகின்றனர். இதில் இன்றைய தினம் 22,287 மாணவியர்களும், 5 தமிழ் பாட விலக்கு (தமிழ் மொழி அல்லாத பாடப்பிரிவு) மாணவ, மாணவியர்களும், 164 தனி தனித்தேர்வர்களும் எழுதினர். இதில் 437 சலுகைகள் பெற்று தேர்வு எழுதும் மாணவ, மாணவியர்களும் தேர்வு எழுதியுள்ளனர்.
இத்தேர்விற்கு 108 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 4 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களும், தனித் தேர்வர்களுக்கு 5 தனித் தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு மாணவ, மாணவியர்கள் செல்லும் வகையில் 6 மலைப்பகுதி வழித்தடம் உட்பட 27 வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 4 விடைத்தாள் சேகரிப்பு மைங்களும், 3 விடைத்தாள் திருத்தும் மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தேர்விற்கு 108 முதன்மைக் கண்காணிப்பாளர்கள். துறை அலுவலர்களும் மற்றும் 170 பறக்கும் படை உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அரசு பொது தேர்வு எழுதும் மாணவ, மாணவியர்களுக்குத் தேவையான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, போக்குவரத்து வசதி, தடையில்லா மின்சார வசதி, மருத்துவ வசதி மற்றும் காவல்துறை சார்பில் உரிய பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வு தொடங்கிய இன்று ஈரோடு குமரன் குட்டையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா இன்று ஆய்வு மேற்கொண்டார்.