அரியலூர், டிச;01
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை, பம்பிள் பி டிரஸ்ட் மற்றும் ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனம் சார்பில், அடிப்படையான ஆங்கில திறன்களை ஆக்கபூர்வ வழியில் வெளிபடுத்துவதற்கான மாவட்ட அளவிலான கலையோடு விளையாடு திறன் மேம்பாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி நேற்று தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியினை துவக்கி வைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:
சமுதாயத்தில் விளிம்புநிலையில் உள்ள, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கும், தரம் உயர்த்தப்பட்ட கல்வியானது கிடைக்கப்பெற வேண்டும் என்ற உன்னதமான நோக்கத்தில் இத்தகைய நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அரியலூர் மாவட்டத்தினை மாதிரி மாவட்டமாக கொண்டு பல்வேறு பள்ளிகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. நகரங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு தரம் உயர்த்தப்பட்ட கல்வி எளிதாக கிடைத்து விடும். கிராமப்புறங்களில் பயிலும் முதல் தலைமுறை மாணவர்களுக்கும் நகரங்களில் கிடைக்கப்பெறும் கல்விக்கு இணையாக கல்வி கிடைக்கப்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்நிகழ்ச்சி செயல்படுத்தப்பட்டுள்ளது.
மாணவர்கள் சுய திறன்களை வளர்த்துக்கொள்ளுதல் வேண்டும். மாணவர்களின் சுய திறன்களை மேம்படுத்திக் கொள்வதற்கான பயிற்சிகளை வழங்குவதற்கு ராம்கோ நிறுவனம் முன்னெடுப்பு மேற்கொண்டுள்ளது. எந்தவித பின்புலமும் இல்லாத மாணவர்களுக்கும் இந்திய அளவிலும், சர்வதேச அளவிலான திறன்களும் கிடைக்கப்பெற வேண்டும் என்பதன் அடிப்படையில் இத்தகைய கலைப்போட்டிகள் மற்றும் விளையாட்டுப்போட்டிகள் மூலம் திறன் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இந்த முன்னெடுப்பு வருங்கால தலைமுறைக்கும், வளமான இந்தியாவை உருவாக்குவதற்கும் ஊன்றுகோலாக அமையும். இத்தகைய முயற்சி வெற்றிப்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தெரிவித்தார்.
மேலும், இந்த முன்னெடுப்பின் மூலம் 20 ஆதிதிராவிடர் நல கிராமப்புற அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்காக 900 க்கும் மேற்பட்ட மாவணர்கள் மற்றும் 35 ஆசிரியர்களின் பல்வேறு முயற்சிகளுடன் இக்குழந்தைகளுக்கு முழுமையான அனுபவத்தை வழங்குகிறார்கள். முழுமையான நம்பிக்கையை வழங்குவதற்கும் அவர்களின் அடிப்படையான ஆங்கில வாசிப்பு, எழுதுதல் மற்றும் பேசும் திறன்களை வளர்ப்பதற்கும் கதைசொல்லல், கையெழுத்து, எழுத்துப்பிழை, உரையாடல், வினாடி வினா, எழுத்துப்பிழை பொருத்துதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் வடிவமைக்கப்பட்டு நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு 20 பள்ளிகளைச் சேர்ந்த 612 அரசு ஆதிதிராவிடர் நல துவக்கப்பள்ளி மாணவர்கள் பள்ளி அளவில் பங்கேற்று இதில் 148 மாணவர்கள் ஒன்றிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றனர். இதிலிருந்து மாவட்ட அளவில் 87 மாணவர்கள் போட்டியிட்டனர். ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்கள் அவர்களின் சாதனைகளுக்கான அங்கீகாரமும், அவர்களின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கான ஊக்கமாக சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் கோப்பைகள் உள்ளிட்ட விருதுகளைப் பெற்றனர்.
இக்கூட்டத்தில் ராம்கோ நிறுவனம் அலகு தலைவர் மதுசூதன் குல்கர்ணி, பம்பிள் பி டிரஸ்ட் நிறுவனர் பிரேம்குமார் கோகுலதாசன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை வட்டாட்சியர் ஆனந்த், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர்கள், ஆதிதிராவிட நல பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணர்வர்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்.