ஈரோடு ஏப் 15
ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பில் படித்த வேலைவாய்ப்பற்றோருக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி மாதம் ஒன்றுக்கு எஸ் எஸ் எல் சி தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200 ம், தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300 ம். மேல்நிலைக்கல்வி (12ம் வகுப்பு) தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400 ம் பட்டதாரிகளுக்கு ரூ.600 ம் வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு எஸ் எஸ் எல் சி மற்றும் அதற்கு கீழ் படித்தவர்களுக்கு ரூ.600 ம் மேல்நிலைக்கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.750 ம் பட்டதாரிகளுக்கு ரூ.1000 ம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் கீழ்க்கண்ட தகுதியுடைய படித்த வேலைவாய்ப்பற்றோர் இவ்வுதவித்தொகையினை பெறுவதற்கான விண்ணப்பத்தினை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் அணுகியும் அல்லது இணையதளம் வாயிலாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
எஸ் எஸ் எல் சி தேர்ச்சி பெற்றவர்கள் , தேர்ச்சி பெறாதவர்கள் (முறையாக பள்ளியில் படித்து SSLC தோல்வி அடைந்திருக்க வேண்டும்) அல்லது அதற்கு மேற்பட்ட கல்வித் தகுதியுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் பதிவினை தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து ஒரு வருடம் முடிவடைந்திருக்க வேண்டும்.
எஸ் சி எஸ் டி பிரிவினருக்கு 31.03.2025 அன்று 45 வயதும், இதர பிரிவினருக்கு 40 வயதும் கடந்திருக்க கூடாது.
விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000 க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் பள்ளி கல்லூரியில் நேரடியாக படித்துக் கொண்டிருக்க கூடாது. (அஞ்சல் வழியில் படிக்கலாம்).
விண்ணப்பதாரர் முற்றிலும் வேலையில்லாதவராக இருத்தல் வேண்டும். சுய வேலைவாய்ப்பிலும் ஈடுபட்டிருக்க கூடாது.
விண்ணப்பதாரர் தனது பள்ளி கல்லூரி கல்வியை முழுமையாக தமிழ்நாட்டில் முடித்திருக்க வேண்டும் அல்லது பெற்றோர் பாதுகாவலர் குறைந்தது 15 ஆண்டுகள் தமிழ்நாட்டில் குடியிருந்திருக்க வேண்டும்.
கலைஞர் உரிமைத்தொகை மற்றும் வேறு எந்தவொரு நிதியுதவியையும் பெறுபவராக இருத்தல் கூடாது
பொறியியல், மருத்துவம், விவசாயம், கால்நடை அறிவியல் போன்ற தொழில்நுட்ப பட்டம் பெற்றவர்கள் இவ்வுதவித்தொகை பெறத் தகுதியற்றவர்கள்
இணையதளம் வாயிலாகவும், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகியும் பெற்றுக் கொள்ளலாம்.
உதவித்தொகை பெற முதல் முறையாக விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுடையவர்கள் விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து விண்ணப்பத்தினை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் துவக்கப்பட்ட கணக்குப் புத்தகம், ஆதார்கார்டு, குடும்பஅட்டை மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் சமர்ப்பிக்கலாம்.
ஏற்கனவே உதவித்தொகை பெற்று வரும் பொது மற்றும் மாற்றுத்திறனாளி பயனாளிகள் சுயஉறுதி ஆவணத்தினை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது .