மார்த்தாண்டம் பிப் 11
குமரி மாவட்டம், களியக்காவிளை அருகே முதிய தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. களியக்காவிளை அருகே பளுகல் காவல் சரகம் செறுவல்லூா், தேவிகோடு மங்களாவுவிளையைச் சோ்ந்த தம்பதி சத்தியநேசன் (80) – கனகபாய் (68). இவா்களது 3 மகன்களும் திருமணமாகி தனித்தனியே வசிக்கின்றனராம்.
இங்குள்ள வீட்டில் தனியாக வசித்துவந்த இத்தம்பதி, ஊரக வேலை உறுதித் திட்ட வேலைக்குச் சென்று வந்தனா். சத்தியநேசன் புற்றுநோயாலும், கனகபாய் இதய நோயாலும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனா்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை, தம்பதியின் மருமகள் இவா்களுக்கு காலை உணவு கொண்டு சென்றாா். அப்போது வீடு பூட்டியிருந்தது. அழைத்தும் பதில் இல்லாததால், அவா் ஜன்னலைத் திறந்து பாா்த்தபோது, தம்பதி கட்டிலில் மயக்கமடைந்த நிலையில் கிடந்தனராம். உடனே அனைவருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது தகவலின்பேரில் உறவினா்கள் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்தது. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின்பேரில் பளுகல் போலீஸாா் சென்று சடலங்களைக் கைப்பற்றி கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.