திருவாரூர் டிச 14
திருவாரூர் மாவட்டத்தில்
கனமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட நன்னிலம் வட்டம், சிறுபுலியூர் ஊராட்சி, பூரதாழ்வார்குடி குக்கிராமத்தில் வயலிருந்து நீர் வெளியேறி அக்கிராமத்தில் நீர் சூழ்ந்துள்ள பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சாரு ஸ்ரீ நேரில் சென்று பார்வையிட்டு அப்பகுதிகளில் வசித்துவரும் 30 க்கும் மேற்பட்ட குடும்பங்களை பாவட்டக்குடி பள்ளி முகாமிற்கு அனுப்பி வைத்தார். முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உணவு, குடிநீர் போன்றவற்றை உடனடியாக வழங்க ஏற்பாடு செய்து தரக்கோரி உரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, கொல்லாபுரம் ஊராட்சி, ஜீவாத்தெரு பகுதியில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் அப்பகுதியில் வசித்துவரும் 15 குடும்பங்களை அருகிலுள்ள அரசு உயர்நிலைப்பள்ளி முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதனையும், கொத்தவாசல் ஊராட்சி அருகிலுள்ள திருமலைராஜன் ஆற்றில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் புஹாரி, நன்னிலம் வட்டாட்சியர் ரஷியாபேகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் பலர் உடனிருந்தனர்.