அரியலூர், டிச;11
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தேசிய மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு, மனித உரிமைகள் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி வாசிக்க அனைத்துத் துறை அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலும், இந்தியாவில் செயல்படுத்தத்தக்க பன்னாட்டு சட்டங்களிலும் வரையறுக்கப்பெற்ற மனித உரிமைகள் குறித்து உண்மையுடனும், பற்றுறுதியுடனும் நடந்துகொள்வேன் என்று நான் உளமான உறுதி மொழிகிறேன். எவ்வித வேறுபாடுமின்றி அனைவரின் மனித உரிமைகளை மதித்து நடப்பதுடன், மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் நான் என்னுடைய கடமைகளை ஆற்றுவேன். என்னுடைய எண்ணம், சொல் அல்லது செயல் மூலம் பிறருடைய மனித உரிமைகளை மீறுகிற எந்தவொரு செயலையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ செய்ய மாட்டேன். மனித உரிமைகள் மேம்படுத்துவதற்கு நான் எப்போதும் ஆயத்தமாக இருப்பேன் என்ற உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் வாசிக்க, அனைத்துத்துறை அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.ரா.சிவராமன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிமளம், மாவட்ட நிலை அலுவலர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்