நாகர்கோவில் ஜூலை 12
குமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் சந்திப்பு ரயில் நிலையத்தில் செயல்பட்டு வரும் ஆர்.எம்.எஸ் – இல் பொதுமக்கள் பயன் பெறும் வகையில் ஆதார் சேவை மையம் நேற்று திறக்கப்பட்டு சேவை தொடங்கப்பட்டது.
பொது மக்களின் ஆதார் சேவையின் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் இந்த நிதியாண்டில் மட்டும் 46327 ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகள் கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்தின் கீழ் உள்ள 43 அஞ்சல் அலுவலகங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளன. மேலும் மதுரை, விருதுநகர் ஆர்.எம்.எஸ்-களில் இயங்கி வரும் ஆதார் சேவை மையங்களைத் தொடர்ந்து நாகர்கோவில் இரயில்நிலைய சந்திப்பு வளாகத்தில் அமைந்துள்ள நாகர்கோவில் ஆர்.எம்.எஸ் – லும் ஆதார் சேவை மையம் மதுரை ஆர்.எம்.எஸ் கோட்ட கண்காணிப்பாளர் உமா ராணி அவர்களால் (11.07.2024) நேற்று திறந்து வைக்கப்பட்டது. இந்த ஆதார் மையத்தில் ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும் நண்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகள் வழங்கப்பட உள்ளன.
இந்த திறப்பு விழாவில் கன்னியாகுமரி கோட்டத்தின் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் க. செந்தில் குமார், தலைமை தாங்கினார். நாகர்கோவில் தலைமை அஞ்சல் அலுவலகத்தின் தலைவர் சு.சுரேஷ் முன்னிலை வகித்தார், நாகர்கோவில் இரயில்நிலையத்தின் மேலாளர் முத்துவேல், நாகர்கோவில் ஆர்.எம்.எஸ்-ன் உபகட்டு அலுவலர் ரமேஷ், கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்தின் உதவி கண்காணிப்பாளர்கள் பரமேஸ்வரன் மற்றும் டென்னிஸ் தாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். பொதுமக்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.