கொல்லங்கோடு, மார்- 5
கொல்லங்கோடு அருகே வள்ள விளை மீனவ கிராமத்தில் ஒரு சொகுசு கார் பக்கவாட்டு கண்ணாடிகள் அடைத்தவாறு நிற்பதாகவும் அதிலிருந்து மண்ணெண்ணெய் வாடை வீசுவதாகவும் அந்த பகுதி மீனவ கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் கொல்லங்கோடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். தொடர்ந்து கார் கதவை திறக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதை அடுத்து ஜேசிபி இயந்திரம் உதவியுடன் காரை மீட்டு கொல்லங்கோடு காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இனயம் பகுதியிலிருந்து மண்ணெண்ணெய் ஏற்றி வந்ததாகவும், இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்ததால் மீனவ கிராமத்தில் சாலையோரம் வாகனத்தை நிறுத்தி டிரைவர் மறைந்து நின்றதாகவும் தெரியவந்தது.
மேலும் அதில் ஆயிரம் லிட்டர் படகுகளுக்கு வழங்கப்படும் மானிய விலை மண்ணெண்ணெய் இருந்ததும் தெரிய வந்தது. போலீசார் மண்ணெண்ணெய் மற்றும் காரை நாகர்கோவில் குடிமை பொருள் குற்றப்பரனாய்வு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.