மார்த்தாண்டம் ஏப் 24
கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே உள்ள ஹோட்டல் ஒன்றில் ஆசையாக பீப் கறியை ஆர்டர் செய்தவருக்கு கரப்பான்பூச்சியுடன் உணவு பரிமாறப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் மார்க்கெட் சாலை பகுதியில் அசைவ உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலுக்கு மார்த்தாண்டம் அருகே உள்ள கண்ணக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஒருவர் நேற்று காலையில் உணவு சாப்பிடுவதற்காக சென்றுள்ளார். அப்போது, அவர் பீப் கறி ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். பீப் இறைச்சியும் அவருக்கு பரிமாறப்பட்டுள்ளது.
பசியில் இருந்த அந்த நபரும் பீப் இறைச்சி உணவை வாங்கி சாப்பிட தொடங்கியுள்ளார். அப்போது, ஏதோ ஒன்று வித்தியாசமாக தென்படவே அதை எடுத்து பார்த்துள்ளார். அப்போது, அதில் கரப்பான் பூச்சி கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து, அவர் உடனடியாக அதை எடுத்து ஹோட்டல் நிர்வாகத்தினரிடம் காட்டி புகார் கூறியுள்ளார்.ஆனால், ஹோட்டல் நிர்வாகத்தினர் அதனை ஏற்கவில்லை. இதையடுத்து, அந்த வாடிக்கையாளர் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்கு விரைந்து வந்த அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது, ஹோட்டலில் இருந்த சமையல் அறை மிகவும் சுகாதாரமற்ற முறையில் இருப்பது தெரியவந்துள்ளது. காலாவதியான உணவுப் பொருட்கள் பலவற்றை வைத்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.இதையடுத்து, அசுத்தமாகவும், சுகாதாரமற்ற முறையிலும் செயல்பட்டு வந்த அந்த ஹோட்டலுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும், ஹோட்டல் உரிமையாளருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதத்தையும் அதிகாரிகள் விதித்தனர். ஆசையாக பீப் கறி சாப்பிட வந்தவருக்கு ஹோட்டல் உணவில் கரப்பான்பூச்சி கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.