சென்னை, ஏப்.7-
வக்ப் ஒழிப்புச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி
தொடர்ச்சியான போராட்டம் நடத்தப்படும் என
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறியிருப்பதாவது;
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மாண்புகளைக் காக்க விரும்பும் பல்வேறு கட்சிகள், அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம், பல்வேறு முஸ்லிம் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் கடும் எதிர்ப்பை மீறி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வக்ப் திருத்தச் சட்ட முன்வடிவு 2024 நிறைவேற்றப்பட்டுள்ளது. உடனடியாக குடியரசுத் தலைவர் இதற்கு ஒப்புதல் அளித்து அது சட்டமாகவும் நடைமுறைக்கு வந்துள்ளது.
குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ள இச்சட்டத்தை வக்ப் திருத்தச் சட்டம் என்று அழைப்பதை விட வக்ப் ஒழிப்புச் சட்டம் என்று அழைப்பதே பொருத்தமானதாகும்.
இச்சட்டத்தில் இடம் பெற்றுள்ள பல அம்சங்கள் வக்ப் சொத்துகளை ஒழிக்கும் வகையில் அமைந்துள்ளதால் இதனை வக்பு ஒழிப்பு சட்டம் என்று குறிப்பிடுகிறோம். இச்சட்டத்தை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முழுமையான தயாரிப்புடனும் உணர்வுப்பூர்வமாகவும் அறிவாற்றலுடனும் கடுமையாக எதிர்த்த எதிர்க்கட்சியினர் அனைவருக்கும் எம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு கட்சிகளில் ஜிகே வாசன் கட்சியைத் தவிர திமுக. அதிமுக காங்கிரஸ் இடது சாரி கட்சிகள் விடுதலை சிறுத்தைகள் இந்த சட்டமுன்வடிவை எதிர்த்துள்ளமைக்கு எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள சொத்துகளை நிர்வாகம் செய்யும் உரிமையைப் பறித்துள்ள வக்ப் ஒழிப்பு சட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்படும். இதில் முதல் கட்டமாக வரும் ஏப்ரல் 15 அன்று மாவட்ட தலைநகரங்களில் பேரணியும் அதன் இறுதியில் தபால் தந்தி அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டமும் நடைபெறும்.
தொடர்ச்சியாக ரயில் நிலையங்கள். சுங்க அலுவலகங்கள். வருமான வரித்துறை அலுவலகங்கள் உள்ளிட்ட ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் வக்ப் ஒழிப்பு சட்டம் திரும்பப் பெறும் வரையில் இந்த தொடர் போராட்டங்கள் அனைத்து நிலைகளிலும் நடைபெறும் என்றும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.