அஞ்சுகிராமம் மார்ச் 30
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள நகை கடையின் உரிமையாளர் கடந்த 16.03.2025 ம் தேதி இரவு கடையை மூடிவிட்டு அடுத்த நாள் வந்து பார்த்த போது கடை உடைக்கப்பட்டு 55 சவரன் தங்க நகைகள் மற்றும் 15 கிலோ வெள்ளி நகைகள் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இது சம்மந்தமாக நகை கடையின் உரிமையாளர் சுப்பிரமணியன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்தில் விரல்ரேகை நிபுணர்கள் மற்றும் Dog Squad உதவியுடன் தடயங்கள் சேகரிக்கப்பட்டது. இத்திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கண்டறிந்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.இரா.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
உத்தரவின் பேரில் கன்னியாகுமரி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் மேற்பார்வையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். தனிப்படையினர் சம்பவ இடத்தில் நடத்திய விசாரணையிலும், 200 க்கும் மேற்பட்ட CCTV காட்சிகளை ஆராய்ந்து, தொழில்நுட்ப உதவியுடன் இக்கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது புன்னார்குளம் பகுதியை சேர்ந்த பாபு என்பவரின் மகன் அஜித்(29). அழகப்பபுரம், தெப்பகுளம் பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவரின் மகன் அசோக்(24) மற்றும் வாரியூர், வட்டக்கோட்டை பகுதியை சேர்ந்த கங்காதரன் என்பவரின் மகன் சுரேஷ் (23) ஆகிய 3 பேர் என தெரிய வந்தது. உடனடியாக தனிப்படையினர் இக்கொள்ளையில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து திருட்டு போன 55 சவரன் தங்க நகைகள் மற்றும் 15 கிலோ வெள்ளி நகைகள் மொத்தமும் மீட்கப்பட்டது.
இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்த கன்னியாகுமரி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் மற்றும் தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்.