அருமனை, மார். 15-
அருமனை அருகே மஞ்சாலுமூடு பகுதியில் தனியார் பள்ளி சேர்ந்த மாணவர்கள் நேற்று பிளஸ் 1 தேர்வு எழுத வந்தனர். தேர்வு எழுத செல்லும் முன்பு பள்ளி மாணவர்களை ஆசிரியர்கள் சோதனை செய்தனர். அப்போது சில மாணவர்களின் பையில் குட்கா இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஆசிரியர்கள் விசாரணையில் அந்த பகுதியில் உள்ள பெட்டிக் கடையிலிருந்து வாங்கியதாக கூறினார்கள்.
இதை அடுத்து ஆசிரியர்கள் அருமனை போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் குறிப்பிட்ட பகுதியில் பரமசிவம் என்பவருக்கு சொந்தமான பெட்டிக்கடையில் சோதனை நடத்திய போது குட்கா ஏதும் சிக்கவில்லை.
பின்னர் அவரது வீட்டிற்கு சென்று சோதனை செய்தபோது, வீட்டின் பின்புறம் இருந்த அறையில் குட்கா பதுக்கி வைத்து மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. போலீசார் 30 பாக்கெட் குட்காவை பறிமுதல் செய்ததுடன் பரமசிவம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து கடைக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.