நாகர்கோவில் மார்ச் 6
கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக இளைஞர்களை நம்பவைத்து போலி ஏஜென்ட்கள் பலர் பண மோசடியில் ஈடுபடுவதாக தொடர்ச்சியாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளது. வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றுவது. விசிட்டிங் விசாவில் அழைத்து சென்று வேலை வாங்கி தராமல் ஏமாற்றுவது, குறிப்பிட்ட வேலை என அழைத்து சென்று ஒப்பந்தம் செய்யப்பட்ட வேலை தராமல் சைபர் அடிமைகள் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுத்தப்படும் செயல் நடைபெற்று வருகிறது. இது போன்ற மோசடிகளில் சிக்கி ஏமாறாமல் இளைஞர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.
விசாவில் குறிப்பிடப்பட்டுள்ள வேலையின் உண்மைதன்மை மற்றும் ஏஜென்ட்கள் குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் 7010363173 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இது போன்ற மோசடிகளில் சிக்கிக் கொண்டால் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாட்சப் எண்ணிலோ (8122223319) அல்லது நேரடியாகவோ புகார் தெரிவிக்கலாம். வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று ஏமாற்றுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ச்சியாக இச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.