தென்தாமரைகுளம் :ஜன.28.
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது.தைத்திருவிழா
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை ப்பதியில் தைத்திருவிழா கடந்த 17- ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற்றது. விழாவின் 11-வது நாளான நேற்று நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்ட நிகழ்ச்சியை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு திரு நடைதிறத்தலும், தொடர்ந்து அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும் நடைபெற்றது. தொடர்ந்து காலை 11 மணிக்கு அய்யா வைகுண்டசாமி பச்சை பல்லக்கு வாகனத்தில் வந்து பஞ்சவர்ண தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது.தொடர்ந்து நண்பகல் 12 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பஞ்சவர்ண தேரில் அய்யா வீற்றிருக்க தேரோட்டம் தலைமை குரு பால பிரஜாபதிஅடிகளார் தலைமையில் தொடங்கியது. தேரோட்ட நிகழ்ச்சிக்கு குருமார்கள் பால ஜனாதிபதி, பால லோகாதிபதி, பையன் கிருஷ்ணராஜ், பையன் கிருஷ்ண நாமமணி, பையன் செல்ல வடிவு,ஜனா.யுகேந்த், ஜனா. வைகுந்த், நேம்ரிஷ்செல்லா,அம்ரிஷ் செல்லா,கவுதம் ராஜா
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தலைமைப்பதியின் முன்பிருந்து புறப்பட்ட திருத்தேர் கீழரத வீதி, தெற்கு ரதவீதி, மேல ரத வீதி வழியாக வடக்கு ரத வீதியில் உள்ள தலைமைப்பதியின் வடக்கு வாசல் பகுதிக்கு வந்தது.
திருத்தேர் வடக்கு வாசல் பகுதிக்கு வரும் போது திரளான அய்யாவழி பக்தர்கள் அய்யா வைகுண்டசாமிக்கு பழம், வெற்றிலை, பாக்கு, பன்னீர் உள்ளிட்ட பொருட்களை நீண்ட வரிசையில் நின்று சுருளாக படைத்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட திருத்தேர் மாலை 6 மணிக்கு நிலைக்கு வந்தடைந்தது. தேரோட்ட நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அய்யா வழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
பின்னர் நேற்று இரவு 7 மணிக்கு அய்யாவின் ரிஷப வாகன ஊர்வலம் நடைபெற்றது.பின்னர் அதிகாலை அய்யாவுக்கு பணிவிடையும் தொடர்ந்து திருக்கொடி இறக்கம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.தொடர்ந்து திருக்கொடி இறக்கியதும் அனைத்து பக்தர்களுக்கும் சிறப்பு போதிப்பும், சிறப்பு வேண்டுதலும் நடைபெற்றது. திரு நடையில் அனைத்து பக்தர்களும் இனிமம் பெற்று,அனைத்து தாங்கல் பணிவிடைதாரர்களுக்கும் நாமமும், விடை வேண்டி விடலையும் பெற்று சென்றனர். பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு வசதி செய்யப்பட்டு இருந்தது.