மதுரை ஜனவரி 18,
மதுரையில் கோயிலுக்கு செல்லும் பாதையை தடுத்த தனியார் நிறுவனம்
மதுரை மாவட்டம் சோளங்குருணி கிராமத்தில் அருள்மிகு போத்திராஜா – வள்ளியம்மை திருக்கோயில் உள்ளது. சோளங்குருணி கிராமத்தைச் சேர்ந்த சுமார் 6 ஆயிரம் பேர் இக்கோயிலில் வழிபாடு செய்து வருகின்றனர். கடந்த 500 வருடங்களாக வண்டிப்பாதை வழியாக கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்து வருகின்றனர். இந்நிலையில் ருத்ரா ப்ரமோட்டர்ஸ் மற்றும் ஆர்.ஆர். கன்ஸ்ட்ரக்ஷன் ஆகிய நிறுவனங்கள் சோளங்குருணி பகுதியில் 1000 ஏக்கர் பரப்பளவில் இடம் வாங்கிப் பதிவு செய்துள்ளன. கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் ருத்ரா ப்ரமோட்டர்ஸ் மற்றும் ஆர்.ஆர். பில்டர்ஸ் அன்று முதல் வழிபாடு நடத்த தங்கள் இடத்தின் வழியாக அனுமதி அளித்துள்ளனர். ஆனால் தற்போது
கிராம மக்கள் கும்பாபிஷேகம் செய்வதற்கு முன்னோட்டமாக பெட்டிச்சாமி வைத்து பூஜை செய்ய 100 க்கும் மேற்பட்டோர் சென்றபோது ருத்ரா ப்ரமோட்டர்ஸ் மேலாளர் இஸ்மாயில் பாதையில் உள்ள கதவைத் திறக்க மறுத்துள்ளார். இதனால் சோளங்குருணி மக்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
சோளங்குருணி கிராம மக்கள் மற்றும் தனியார் நிறுவனம் ஆகிய இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதுகுறித்து பெருங்குடி போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். பெருங்குடி சார்பு ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையில் போலீசார் இருதரப்பினரையும் பேசி கோயிலுக்குச் செல்ல ஏற்பாடுகள் செய்தனர்.