அரியலூர், நவ;26
அரியலூர் மாவட்டம், அரியலூர் போக்குவரத்து கழக பணிமனையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப)லிட், கும்பகோணம் கோட்டத்தில் பணிபுரிந்த காலத்தில் மறைந்த பணியாளர்களின் 28 வாரிசுதாரர்களுக்கு (4 மகளிர் உட்பட) பணி நியமன ஆணைகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்ப)லிட், கும்பகோணம் கோட்டத்தைச் சேர்ந்த திருச்சி, கும்பகோணம், நாகப்பட்டினம், கரூர், புதுக்கோட்டை மற்றும் காரைக்குடி ஆகிய 6 மண்டலங்களில் பணிபுரிந்த காலத்தில் மறைந்த பணியாளர்களின் 28 வாரிசுதார்களுக்கு பணி நியமன ஆணைகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் வழங்கினார். அதன்படி 4 மகளிர் நடத்துநர் உட்பட 25 நபர்களுக்கு நடத்துநர் பணிக்கான ஆணைகளையும், 2 ஓட்டுநர் பணிக்கான ஆணைகளையும் மற்றும் 1 தொழில்நுட்ப பணியாளர் பணிக்கான ஆணையினையும் வழங்கினார்.
அந்த வகையில் கும்பகோணம் மண்டலத்தில் 5 நடத்துநர் பணியிடத்திற்கும், நாகப்பட்டினம் மண்டலத்தில் 3 நடத்துநர்களுக்கும், திருச்சி மண்டலத்தில் 2 மகளிர் உட்பட 6 நடத்துநர்களுக்கும், கரூர் மண்டலத்திற்கு 2 நடத்துநர்களுக்கும், காரைக்குடி மண்டலத்தில் 1 ஒட்டுநர் மற்றும் 1 மகளிர் உட்பட 6 நடத்துநர்களுக்கும், புதுக்கோட்டை மண்டலத்தில் 1 ஒட்டுநர் மற்றும் 1 மகளிர் உட்பட 3 நடத்துநர்களுக்கும், 1 தொழில்நுட்ப பணியாளருக்கும் நேற்றையதினம் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, இலகுரக வாகன பயிற்சி வாகனத்தினையும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இலகுரக வாகன பயிற்சிக்கு நபர் ஒருவருக்கு (ஜி.எஸ்.டி உட்பட) ரூ.7080 கட்டணமாக செலுத்த வேண்டும். பயிற்சிக் காலம் 22 நாட்களாகும். (செயல்முறை பயிற்சி காலம் 25 மணி நேரம் மற்றும் நேர்முக வகுப்பு 5 மணி நேரம்). முகவரி மாற்றத்திற்கான கட்டணம் தனியாக பயிற்சி பெறுபவர் செலுத்திக்கொள்ள வேண்டும் (தோராயமாக) ரூ.600 ஆகும்.
இந்நிகழ்ச்சியில் அரியலூர் நகர்மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன், நிர்வாக இயக்குநர் (கும்பகோணம்) இரா.பொன்முடி, திருச்சி மண்டல பொது மேலாளர் முத்துகிருஷ்ணன், பொதுமேலாளர் (கூட்டாண்மை தொழில்நுட்பம்) சிங்காரவேலன், துணை மேலாளர் (மனிதவள மேம்பாடு) ரெங்கராஜன், துணை மேலாளர் (வணிகம்-கூட்டாண்மை) இராமநாதன், துணை மேலாளர்கள் சுரேஷ் (வணிகம் திருச்சி மண்டலம்), சுவாமிநாதன் (தொழில்நுட்பம் திருச்சி மண்டலம்), ரவி (பணியாளர் & சட்டம் திருச்சி மண்டலம்) பத்மகுமார் (பணியாளர் & சட்டம் காரைக்குடி மண்டலம்), அனைத்து மண்டல உதவி மேலாளர்கள், அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள், ஓட்டுநர்கள், நடத்துநர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் இதர அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்