தக்கலை நவ 22
குமரி மாவட்டம் மேல்புறம் அருகே கார் மோதியதில், பைக்கில் பயணித்தவர்கள் தூக்கி வீசப்பட்டு ஒருவர் உயிரிழந்தார். பத்துகாணியை சேர்ந்த பிரவீன் தனது பைக்கில் நண்பர்கள் இருவரை அழைத்து கொண்டு குழித்துறை நோக்கி சென்ற போது, லாரியை முந்தி செல்ல முயன்ற கார் ஒன்று பைக்கின் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மூவரில் ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து விழிப்புணர்வு வீடியோ பதிவு ஒன்றை தக்கலை போக்குவரத்து ஒழுங்குப் பிரிவு ஆய்வாளர் அருண் வெளியீட்டு தெரிவித்திருப்பதாவது :- மேல்புறம் அருகே காரை ஒட்டி வந்த நபர் மிகவும் கவன குறைவாக தனது வாகனத்தில் முன்பு சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றுள்ளார். அப்போது அந்த குறுகிய சாலை ஓரத்தில் ஒரு லோடு ஆட்டோ பொது இடத்தில் ஆபத்தான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த விபத்திற்கான முழு காரணம் முழுக்க முழுக்க லாரியை முந்தி செல்ல முற்பட்ட காரால் ஏற்பட்டதாக இருந்தாலும் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த இளைஞர்கள் விபத்தில் சிக்கி உயிரிழக்க காரணம் தலைக்கவசம் அணியாததே ஆகும். எனவே வாகனத்தை ஓட்டும் நபர்களுக்கு காவல்துறை சார்பாக எனது அன்பான வேண்டுகோள் ஒரு வாகனத்தை முந்தி செல்லும் போது கவனமாக இருங்கள். அதேபோல் சாலை ஓரங்களில் விபத்தை ஏற்படுத்தும் விதமாக பொது இடங்களில் வாகனத்தை நிறுத்த வேண்டாம். இருசக்கர வாகனங்களில் பயணம் செய்வோர் கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்து பாதுகாப்புடன் செல்லுங்கள் சாலை விதிகளை மதித்து சாலை விபத்திலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். மேலும் சாலை விதிகள் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாததால் பெரும்பாலான விபத்துகள் நிகழ்கின்றன. விபத்துகளை தடுப்பது நம் கைகளில்தான் இருக்கின்றன. அதற்கான சில வழிகளை அறிவோம். இன்றைய காலகட்டத்தில் சாலை விபத்து ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எங்கு, எப்போது வேண்டுமானாலும் விபத்து நிகழலாம். அதிகரித்திருக்கும் வாகன பெருக்கத்தாலும், வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மீறுவதாலும் பெரும்பாலான விபத்துகள் ஏற்படுகின்றன என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இருசக்கர வாகனம் ஓட்டும்போது கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும். “மிதவேகம் மிக நன்று” என்பதை மனதில் கொண்டு மெதுவாக பயணம் செய்யுங்கள். தொடர்ச்சியாக நீண்ட தூரம் வாகனம் ஓட்டி பயணம் செய்வதை தவிருங்கள். வாகன ஓட்டுநர்கள் சாலையின் இடது புறத்திலேயே வாகனங்களைச் செலுத்த வேண்டும். குறுக்குச்சாலை அல்லது பாதசாரிகள் கடக்கும் இடங்களில் வண்டியின் வேகத்தைக் குறைத்துச் செல்ல வேண்டும். வாகனம் ஓட்டும்போது கண்டிப்பாக செல்போன் பேசுவதை தவிர்த்துவிடுங்கள். தவிர்க்க முடியாத சமயங்களில் சாலை ஓரத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு பேசுங்கள்.பல வாகன ஓட்டிகள் நிதானமான வேகத்தை கடைபிடிப்பதில்லை. வேகமாக ஓட்டுவதால் அவர்களுக்கும், அதைவிட அதிகமாக பிறருக்கும் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.சாலை விதிகள் நமக்கு அல்ல, அடுத்தவர்களுக்குத்தான் என்கிற மனப்பான்மை பொதுவாக எல்லாரிடமும் இருக்கிறது. சாலை விதிகள் நம் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்டவை என்பதை அனைவரும் உணர வேண்டும். இதுவே விபத்துகளுக்கு வழி வகுக்கிறது. இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும்போது விளையாட்டாக பேசிக்கொண்டே போகாதீர்கள். தீயணைப்பு வாகனம், அவசர ஊர்தி மற்றும் ஆம்புலன்ஸ் வண்டி போன்றவைகளுக்கு வாகன ஓட்டுநர்கள் தடையின்றி வழிவிடுதல் அவசியமாகும்.வாகன ஓட்டுநர் தனக்குமுன் செல்லும் வாகனத்திற்கும், தனது வாகனத்திற்கும் குறிப்பிட்ட அளவு இடைவெளி இருக்குமாறு சென்றால், வண்டிகள் மோதிக் கொள்வதை தவிர்க்கலாம். போக்குவரத்து விளக்குகளில் சிவப்பு விளக்கு எரிந்தால் நில், செல்லாதே என்றும், மஞ்சள் விளக்கு எரிந்தால் சாலையைக் கடக்கத் தயாராக இரு என்றும், பச்சை விளக்கு எரிந்தால் செல் என்றும் அறிவிக்கின்றது. சீக்கிரமாக குறித்த இலக்கினை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் வேகமாகச் செல்வது விபத்து நடக்க காரணமாகிறது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதும் பெரும்பான்மையான விபத்துகளுக்கு முக்கிய காரணமாகும். 18 வயதிற்கு உட்பட்டவர்கள் இரண்டு சக்கர வாகனத்தையோ, நான்கு சக்கர வாகனத்தையோ ஓட்டுதல் கூடாது. மேலே கூறிய விதிமுறைகளை முறைப்படி கடைப் பிடிப்பதன் மூலம் சாலை விபத்துகளை தவிர்ப்போம், உயிர்களை காப்போம்.. என வீடியோ மூலம் விழிப்புணர்வை பதிவை வெளியிட்டு வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.