தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சியில் முடிவுற்ற தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நேரடி கொள்முதல் நிலையத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமைச்செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்ததைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் ,தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.ராணிஸ்ரீகுமார், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனிநாடார் , ஆகியோர் குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் தென்காசி மண்டலத்தில் பொது விநியோகத் திட்டம் மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவுத் திட்டம் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் மற்றும் மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட கொள்முதல் திட்டத்தின் கீழ் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்து அரசு திட்டப்பணிகளை செய்து வருகிறோம். தென்காசி, செங்கோட்டை, ஆலங்குளம், வாசுதேவநல்லூர் மற்றும் சங்கரன்கோவில் என 5 வட்டங்களில் செயல்முறை கிட்டங்கிகள் மற்றும் 160 அமுதம் நியாய விலைக்கடைகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களின் தேவைக்கேற்ப மாவட்ட வேளாண்மைத்துறையின் பரிந்துரையின்படி அறுவடை நேரத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதில் கடந்த 2023-2024 ஆம் பருவத்தில் மட்டும் 36 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சன்னரகம் கிலோ ரூ.23.10/- க்கும், பொது ரகம் ரூ.22.65/- க்கு 2524 பயனாளிகளிடமிருந்து சுமார் 23027 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு ரூ.52,93,88,608/- நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
தற்போது 2024-2025 – ஆம் பருவத்தில் சன்னரகம் கிலோ ரூ.24.50/- க்கும், பொதுரகம் கிலோ ரூ.24.05/-க்கு சுமார் 40 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்திடத் தேவையான தளவாடப் பொருட்களுடன் சுமார் 35,000/- மெட்ரிக் டன் நெல் வரையில் கொள்முதல் செய்ய தயார் நிலையில் உள்ளது. இன்றையதினம் தென்காசி வட்டம் சுந்தரபாண்டியபுரம், செங்கோட்டை வட்டம் தேன்பொத்தை, மற்றும் வாசுதேவநல்லூர் வட்டம் தலைவன்கோட்டை ஆகிய மூன்று பகுதிகளில் நிரந்தரமாக கழகத்திற்கு சொந்தமான இடத்தில் சுமார் தலா ரூ.62.5 இலட்சம் மதிப்பில் நிரந்தரக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அப்பகுதியில் உள்ள பல்வேறு விவசாயிகள் பயன்பெறுவார்கள். எனவே விவசாயிகள் அனைவரும் இந்த நெல் கொள்முதல் நிலையத்தினை பயன்படுத்தி விவசாயத்தினை வளப்படுத்தி வாழ்வில் வளம் பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் முதுநிலை மண்டலமேலாளர்/இணைப்பதிவாளர் (தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம்) ராஜேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்) கனகம்மாள், உதவி செயற்பொறியாளர் மயில்வாகனன் உதவிப்பொறியாளர் சந்திரபோஸ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.