நாகர்கோவில் ஜூலை 1
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அபாயகரமாக வாகனம் ஓட்டுபவர்களைக் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க “7010363173” என்ற செல் எண்ணை பொதுமக்களுக்கு அறிவித்துள்ள நிலையில் தற்போது ஏழு வாகனங்கள் கைப்பற்றப்பற்றுள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின்படியும், குளச்சல் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் பிரவின் கவுதம் மேற்பார்வையில், குளச்சல் போக்குவரத்து ஆய்வாளர் வில்லியம் பெஞ்சமின் தலைமையில் போக்குவரத்து காவலர்கள் குளச்சல் பகுதியில் 30 ம் தேதி அதிகாலையில் வாகன சோதனை மேற்கொண்டதில் அதிவேகமாகவும் அபாயகரமாகவும் இருசக்கர வாகனங்கள் ஓட்டி வந்த ஏழு இளைஞர்களுக்கு தலா ரூ.11000 அபராதம் விதித்து இரு சக்கர வாகனங்கள் கைப்பற்றப்பற்றுள்ளது. அதில் 18 வயது பூர்த்தியடையாத இளையோர் இருவருக்கு அவர்களது பெற்றோருக்கும் சேர்த்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இரு சக்கர வாகனங்களை ஓட்டி வந்த இளைஞர்களை விசாரித்து அவர்களது கைப்பேசியை சோதனை செய்ததில், இவ்வாறு விலை உயர்ந்த இரு சக்கர வாகனம் வைத்திருப்பவர்கள் வாரம் ஒருமுறை ஏதாவது ஒரு இடத்தில் சந்தித்து, வீடியோக்கள் எடுத்து அதனை “இன்ஸ்டாகிராம் ” தளத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். பின்னர் யார் அதிக லைக்குகள் பெறுகின்றனர் என்பதை பொறுத்து அந்த பைக் வைத்திருக்கும் இளைஞர் மற்ற இளைஞர்களுக்கு தலையாக செயல்படுவது தெரிய வந்தது. மேலும் இன்ஸ்டா மூலம் பெண் நண்பர்கள் தெரிவு செய்வது போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு சில இளைஞர்கள் தங்கள் செல்போன்களில் மூலம் ஆபாச படங்கள் பார்ப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டனர். அவர்களுக்கு போதை பழக்க வழக்கங்கள் ஏதும் இல்லை.
பின்னர் அவர்களின் பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவிக்கப் பட்டு காவல்நிலையம் வரவழைக்கப்பட்டு தங்கள் பிள்ளைகள் இணைய தளத்தை எவ்வாறு பயன் படுத்துகின்றனர், அவர்களின் நெருக்கமான நண்பர்கள் யார், அவர்களின் நடவடிக்கை எவ்வாறு உள்ளது,அவர்கள் எங்கு செல்கின்றனர், பைக்குகள் செல்போன் வாங்க பணம் எப்படி வருகிறது, வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனரா என்பதையும் கண்காணிக்க வேண்டும் என்று பெற்றோர்களுக்கு அறிவுறுத்தபட்டது.