மதுரை மே 07
மதுரை மண்டல ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட லெவல் கிராசிங்கில் கடந்த 2023 ஆண்டில்
பூட்டிய ரயில்வே லெவல் கிராசிங் கேட்டுகளில் மோதி விபத்து ஏற்படுத்திய 74 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் ரயில்களை விபத்து இல்லாமல் இயக்க சாலைகள் சந்திக்கும் இடங்களில் லெவல் கிராசிங் கேட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கேட் ரயில் வரும் போது இருபுறமும் பூட்டப்படும் இதன் மூலம் ரயிலில் வாகனம் மோதி விபத்து ஏற்படுத்தும் நிகழ்வுகள் தவிர்க்கப்பட்டு வருகின்றன. இருந்த போதிலும் கவனக்குறைவாக வேகமாக வாகனங்களை இயக்குவோர் ரயில்வே கேட்டுகளில் மோதி இடித்து விபத்துகளை உண்டாக்குகின்றனர்.
மதுரை கோட்டத்தில் இது மாதிரி விபத்துகளில் சிக்கிய 74 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது மாதிரியான குற்றச்செயல்களுக்கு ரயில்வே சட்டப்படி ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கவும் வாய்ப்பிருக்கிறது. ரயில்வே கேட்டுகளில் பணியாற்றும் ரயில்வே ஊழியர்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் ஆறு மாத சிறைத்தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் ரயில்வே கேட்டுகளுக்கு முன்பாக இருபுறமும் எச்சரிக்கை பலகைகள் மற்றும் வேகத்தடைகள் அமைக்கப்பட்டன. பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் மட்டும் ரயில் பாதையை கடந்து விபத்தை தவிர்க்க வேண்டும் என கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா வேண்டுகோள் விடுத்துள்ளார். இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த உலக லெவல் கிராசிங் விழிப்புணர்வு நாள் அனுசரிக்கப்பட்டது. மண்டல போக்குவரத்து அதிகாரி அலுவலகம் பெட்ரோல் பங்குகள் பேருந்து நிறுத்தங்கள் சந்தை வளாகங்கள் லெவல் கிராசிங் கேட்டுகள் ஆகிய இடங்களில் கூடும் சாலை வாகன உபயோகிப்பாளர்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட்டது. முன்னதாக இதற்கான பிரச்சார வாகனத்தை கோட்ட ரயில்வே மேலாளர் கொடி அசைத்து பிரச்சாரத்தை துவக்கி வைத்தார். விழிப்புணர்வு பிரச்சாரம் முதுநிலை கோட்ட பாதுகாப்பு அதிகாரி மொகைதீன் பிச்சை தலைமையில் நடைபெற்றது.