திருவட்டாறு, மார். 2_
திருவட்டாறு அருகே அரமன்னம் என்ற பகுதியை சேர்ந்த 1வர் ரமேஷ் மகள் அஸ்மிதா (14). இவர் அதே பகுதி திருவரம்பு அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் மகள் சுபினா (13) இவரும் அதே பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர்கள் இருவரும் தோழிகள் ஆவார்கள். இரண்டு பேரும் தினமும் காலையில் ஒன்றாக பள்ளிக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பும் வழக்கம்.
நேற்று காலையில் இரண்டு மாணவிகளும் பள்ளிக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றனர். மாலை 6 மணி ஆகியும் வீட்டிற்கு இரண்டு மாணவிகளும் வரவில்லை. இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர் பள்ளிக்கு சென்று தேடினார்கள். அங்கு இல்லாததால் ஆசிரியரிடம் போனில் விசாரித்த போது, காலையில் இரண்டு மாணவிகளும் பள்ளிக்கு வரவில்லை என்று தெரிவித்தனர்.
இதையடுத்து இரண்டு மாணவிகளின் பெற்றோரும் இது சம்பந்தமாக திருவட்டாறு போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் புகாரை பெற்றுக்கொண்டு இன்ஸ்பெக்டர் காந்திமதி தலைமையில் பல்வேறு கோணங்களில் பள்ளி மாணவிகளை தேடி வருகிறார்கள்.