குளச்சல், பிப்- 26
மண்டைக்காடு அருகே கருமங்குடல் பகுதியை சேர்ந்தவர் ஜான் வில்சன் (65). இவர் குளச்சல் சன்னதி தெருவில் ஒரு நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் நிறுவனத்தில் கடந்த மாதம் 27ஆம் தேதி குளச்சல் பூலான் விளையை சேர்ந்த மீன் சுமை தூக்கும் தொடிலாளி கிருஷ்ணன் (42) என்பவர் ரூபாய் 25 ஆயிரத்துக்கு நகை அடகு வைத்து பணம் பெற்று சென்றார்.
இந்த நிலையில் நேற்று அதே பகுதியை சேர்ந்த மீனவரான ஆரோக்கிய பிரபின் என்பவருடன் சென்று கிருஷ்ணன் மீண்டும் கூடுதல் பணம் கேட்டு வந்துள்ளார். ஜான் வில்சன் அந்த நகையை எடுத்து சோதனை செய்தார். அப்போது அது போலி நகை என தெரிய வந்தது.
உடன் அவர் கிருஷ்ணன் உட்பட இரண்டு பேரையும் அங்கு அமரும்படி கூறி விட்டு, பின்னர் குளச்சல் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் விரைந்து சென்று இரண்டு பேரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து கிருஷ்ணன், ஆரோக்கிய பிரவின் இரண்டு பேரையும் கைது செய்தனர். இதில் ஆரோக்கிய பிரவின் மீது ஏற்கனவே குளச்சல் போலீஸ் நிலையத்தில் இரண்டு வழக்குகள் உள்ளது தெரிய வந்தது.