நாகர்கோவில் செப் 25,
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் செல்போன் தொலைந்து போனதாக பல்வேறு மனுக்கள் பெறப்பட்டது. அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவிட்டார். எனவே சைபர் பிரிவு போலீசார் காணாமல் போன செல்போன்களை மீட்கும் பணியில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். தொடர் நடவடிக்கையால் தற்போது சுமார் 1,90,00,000/- (ஒரு கோடி தொண்ணூறு லட்சம் ரூபாய்) மதிப்புள்ள 1000 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளது.
மேற்படி கண்டுபிடிக்கப்பட்ட செல்போன்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நபர்களிடம் நேற்று ஒப்படைத்தார்க. இந்த செல்போன்களை கண்டுபிடிக்க காரணமான சைபர் பிரிவு போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார். மேலும் செல்போன் காணாமல் போனதாக பெறப்பட்ட புகார் மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வருடத்தில் மட்டும் சுமார் 2,50,00,000/- (இரண்டு கோடி ஐம்பது லட்சம் ரூபாய்) மதிப்புள்ள 1303 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்கள் தங்களுடைய செல்போன் தொலைந்து போனால் CEIR Portal (https://ceir.sancharsaathi.gov.in/) என்ற இணையதளத்திலும் தங்களது புகாரை பதிவு செய்யலாம். என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.