தருமபுரி, மே – 04
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் ஆகிய 3 மாவட்டங்களின் ஊரகப் பகுதிகளில் கோடை காலங்களில் சீரான குடிநீர் வழங்குவது குறித்த ஆய்வு கூட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அரசு முதன்மைச் செயலாளர் முனைவர் ப.செந்தில்குமார், தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, முன்னிலையில் இன்று (03.05.2024) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அரசு முதன்மைச் செயலாளர் முனைவர் ப.செந்தில்குமார், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-
மாவட்ட அளவில் கிராம ஊராட்சிகளில் குடிநீர் விநியோகம் குறித்து எவ்வித புகாருமின்றி சீராக வழங்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் குடிநீரினை குடிப்பதற்கும், சமைப்பதற்கும் மட்டும் பயன்படுத்தவும், ஒகேனக்கல் குடிநீரை முறையாக பயன்படுத்தவும், குடிநீர் வீணாவதை தடுக்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளில் தண்ணீர் கசிவு ஏற்பட்டு குடிநீர் வீணாவதை தடுக்க அனைத்து ஊராட்சி செயலர், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், அனைத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் ஆய்வுக்கூட்டம் நடத்தி குடிநீர் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், ஊரக பகுதிகளில் முறையற்ற குடிநீர் இணைப்புகளை கண்டறிந்து துண்டித்திடவும் / முறைப்படுத்திடவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும், அனைத்து ஊராட்சிகளிலுள்ள குக்கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க ஊராட்சி செயலர், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், அனைத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குழுக்களாக செயல்பட்டு குடிநீர் தட்டுப்பாட்டை உடனுக்குடன் சரிசெய்ய அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
ஊரகப் பகுதிகளில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் வடிவமைக்கப்பட்ட அளவீட்டின் அடிப்படையில் நாள்தோறும் குடிநீர் வழங்கப்படுகிறதா எனவும், வடிவமைப்பின் முழு அளவீட்டில் குடிநீர் வழங்குவதில் உள்ள நடைமுறை சிக்கல் மற்றும் காரணங்கள் குறித்து குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களிடம் கேட்டறிந்து, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் குடிநீர் வழங்க வேண்டிய ஊரகப்பகுதிகளில் குடிநீர் குழாய் பழுது மற்றும் உடைப்பு ஆகியவற்றை விரைந்து சீரமைக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் குடிநீர் வழங்க இயலாத பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் உள்ளூர் நீர்ஆதாரங்களைக் கொண்டு குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். மின் விசைப் பம்புகளில் பழுதோ அல்லது குடிநீர் குழாய் உடைப்போ ஏதேனும் ஏற்பட்டால் உடனுக்குடன் பழுதினை சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமெனவும், பழுதடைந்த மின்மோட்டார்கள் மற்றும் குழாய்களை சரிசெய்து விரைந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், மின் துறையின் சார்பில் ஒருமுனை மின்சாரம் வழங்கப்படும் பகுதிகளில் மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், கோடை காலங்களில் அதிகப்படியான மின் நுகர்வின் காரணமாக மின்னழுத்த வேறுபாடு ஏற்படும் பகுதிகளில் பிரச்சனைகளை உடனுக்குடன் ஊரக வளர்ச்சி துறை, மின்வாரிய அலுவலர்கள் ஒருங்கிணைந்து சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களக்கு அறிவுரை வழங்கப்பட்டது.